மதுரை டூ இலங்கை இடையிலான விமான சேவைக்கு அமோக வரவேற்பு.. இனி வாரம் 6 முறை!

Manjula Devi
Sep 02, 2024,10:52 AM IST

மதுரை:   மதுரை - கொழும்பு இடையிலான விமான சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதைத் தொடர்ந்து அடுத்த மாதம் அக்டோபர் 29ஆம் தேதி முதல்  கூடுதல் விமான சேவை இயக்கப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.


மதுரையில் இருந்து கொழும்பிற்கு கடந்த 2012ம் ஆண்டு முதல் விமான சேவை தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது வரை மதுரையிலிருந்து கொழும்புவிற்கு வாரம் ஐந்து நாட்களுக்கு விமான சேவை நடத்தப்பட்டு வருகிறது. மதுரையில் இருந்து இலங்கைக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இந்த சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.




தற்போது செவ்வாய் மற்றும் வியாழக் கிழமையை தவிர்த்து வாரத்தில் ஐந்து நாட்கள் மதுரை டூ இலங்கை இடையே ஏற்கனவே விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதை அதிகரிக்க நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு ஏற்கனவே ஐந்து  நாட்கள்  இயக்கப்பட்டு வரும் விமான சேவை தற்போது மேலும் ஒரு நாள் அதிகரித்து ஆறு நாட்கள் இயக்க ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 


அதன்படி அக்டோபர் 29ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமையும் சேர்த்து வாரத்திற்கு ஆறு நாட்கள் மதுரை டூ இலங்கை இடையே விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன. வியாழக்கிழமை தவிர்த்து வாரத்தில் ஆறு நாட்களும்  மதுரை டூ ஸ்ரீலங்கா இடையே விமான சேவை அக்டோபர் 29 முதல் இயக்கப்படுவதாக அதிகார அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்