களை கட்டிய மதுரை... கொடியேற்றத்துடன் துவங்கிய சித்திரை திருவிழா 2024

Aadmika
Apr 12, 2024,11:36 AM IST

மதுரை : உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 2024ம் ஆண்டிற்கான சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 12ம் தேதியான இன்று காலை காலை துவங்கிய உள்ளது. நூற்றுக் கணக்கான பக்தர்களின் பக்தி பரவசத்திற்கு இடையே விழா துவங்கியது.


மதுரைக்கு பெருமை சேர்க்கும் விஷயங்களில் ஒன்றாக கருதப்படுவது சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை விழா. ஆண்டுதோறும் பங்குனி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் கொடியேற்றத்துடன் துவங்கி, 12 நாட்கள் இவ்விழா நடைபெறுவது வழக்கம். தென்கரையில் மீனாட்சி கோவிலில் துவங்கி, வட கரையில் கள்ளழகர் கோவிலில் இவ்விழா நிறைவு பெறுவது கூடுதல் சிறப்புடையதாகும். 51 சக்தி பீடங்களில் ஒன்றாக போற்றப்படும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12ம் தேதியான இன்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்கியது.




சொக்கநாதர் சுவாமி சன்னதிக்கு முன்பு உள்ள தங்க கொடிமரத்தில், திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது. திருவிழாவின் முதல் நாளான இன்று துவங்கி, கடைசி நாள் வரை தினமும் அம்பாள், சுவாமியின் வீதிஉலா நடைபெறும். திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை சுவாமியும், பிரியாவிடை அம்மனும் கற்பக விருட்ச வாகனத்திலும், மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் செய்வார்கள். 


சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி பட்டாபிஷேகம் ஏப்ரல் 19ம் தேதியும், மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்ரல் 21ம் தேதியும், திருத்தேரோட்டம் ஏப்ரல் 22ம் தேதியும் நடைபெற உள்ளன. ஏப்ரல் 22ம் தேதி மதுரையில் கள்ளழகருக்கு எதிர்சேவையும், ஏப்ரல் 23ம் தேதி காலை 6 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில், கள்ளழகர் வேடமிட்டு, அழகர்மலை சுந்தரராஜ பெருமாள் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 


சித்திரை திருவிழா துவங்கி விட்டதால் மதுரையே களை கட்ட துவங்கி விட்டது. மீனாட்சி அம்மன் கோவிலின் மாட வீதிகளில், கோடை வெயிலுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.