Madurai rain.. மதுரையில் 2 நாட்களாக தொடர் மழை.. என்டு கார்டே இல்லையா.. புலம்பும் மதுரை மக்கள்..!

Manjula Devi
Dec 13, 2024,01:53 PM IST

மதுரை: வங்கக் கடலில் வலுவிழந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக குமரிக்கடல் நோக்கி வருகிறது. இதனால் தென்மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது.


வங்கக்கடலில் கடந்த புதன்கிழமை காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி வந்தது. இதனால் கடந்த இரண்டு நாட்களாகவே சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நாகை, மயிலாடுதுறை, கடலூர் தஞ்சாவூர், திருவாரூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதனை தொடர்ந்து இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழ்நாடு கடற்கரை பகுதிகளை நெருங்கியது. அப்போதிலிருந்து தென் மாவட்டங்களில்  பரவலாக கன மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக தென்காசி, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை விட்டு விட்டு பெய்து வந்தது. 




இதற்கிடையே மதுரையில் புதன் கிழமை இரவு  10 மணிக்கு தொடங்கிய மழை இரண்டு நாட்களாக இரவிலும் பகலிலும் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து கொண்டே இருந்தது. வில்லாபுரம், அவனியாபுரம், செல்லூர், சிம்மக்கல், பெரியார் பேருந்து நிலையம், திருப்பரங்குன்றம், வேலூர், கோரிபாளையம், அழகர் கோவில், புதூர், ஆனையூர், கூடல் நகர், அலங்காநல்லூர், பாலமேடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.


நேற்று இரவு முதல் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது வரை கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. தற்போது  இந்த கனமழை சுமார் 2 மணி நேரம் மேலாக நீடித்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் முழங்கால் அளவிற்கு தேங்கி உள்ளது. மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்து குடியிருப்பு பகுதிகளில் செல்வதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் தாழ்வான சாலைகளிலும் மழைநீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதிகளிலும் பல இடங்களில் தண்ணீர் வெள்ளம் போல தேங்கியிருப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சபரிமலை சீசன் தற்போது நடப்பதால் பெருமளவில் பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். அவர்களுக்கு இந்த மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


இதற்கிடையே தென் மாவட்டங்களில் டிசம்பர் 14ஆம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்த நிலையில், மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் விடாமல் மழை பெய்து வருகிறது . மதுரைக்கு மழை கிடையாது..  மழை வராது..நாங்கள் பாதுகாப்பாக நடுவில் இருக்கிறோம் என மதுரைக்காரர்கள் மார்தட்டிக்கொண்ட வேளையில் மழைக்கு ஒரு என்டுகார்டே இல்லையா என்று புலம்பும் அளவுக்கு மழை வச்சு செய்து வருகிறதாம்.. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்