அலங்காநல்லூரிலிருந்து கிளம்பி.. அசோக் நகரில் அதிர்வுகளை ஏற்படுத்திய மகாவிஷ்ணு.. யார் இவர்??

Su.tha Arivalagan
Sep 06, 2024,04:50 PM IST

சென்னை: மகாவிஷ்ணு.. ஜஸ்ட் 30 வயதுதான்.. ஒரு பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையம் ஏற்படுத்தி விட்டார். அவரது அடையாளம் என்னவோ ஆன்மீக பேச்சாளர், சொற்பொழிவாளர், தன்னம்பிக்கை பேச்சாளர் என்பதுதான். ஆனால் அசோக் நகர் பள்ளியில் அவர் நடந்து கொண்ட விதத்தால் மூடநம்பிக்கை பேச்சாளர் என்ற புதிய அடையாளம் அவரைத் தேடி வந்து விட்டது.


தமிழ்நாட்டில் அவ்வப்போது யாராவது ஒருவர் வந்து கொண்டேதான் உள்ளார். அவர்கள் யார், என்ன பின்னணி என்றே தெரியாது.. திடீரென வருவார்கள்.. ஒரு பரபரப்பைக் கிளப்புவார்கள்.. அந்த பரபரப்பில் வளர்ந்து விஸ்வரூபம் எடுப்பார்கள்.. இப்படித்தான் பலரும் வந்துள்ளனர், வளர்ந்துள்ளனர். இவர்களால் மக்களுக்கோ, சமுதாயத்திற்கோ ஏதாவது நல்லது நடந்திருக்கிறதா என்றால் இல்லை என்பதே பதிலாக வரும். காரணம், இவர்கள்தான் இந்த பரபரப்பால் வளர்ந்திருப்பார்கள்.




இப்படித்தான் இப்போது பரம்பொருள் பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வரும் மகாவிஷ்ணு வந்து சேர்ந்துள்ளார். 2021ம் ஆண்டுதான் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் இது பல்வேறு இடங்களிலும் கிளை பரப்பி வேகமாக வளர்ந்துள்ளது. இதை நிறுவியவர்தான் மகாவிஷ்ணு. இவரது இயற் பெயர் என்ன என்று தெரியவில்லை. 


யார் இந்த மகாவிஷ்ணு?


மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில்தான் இந்த மகாவிஷ்ணு பிறந்துள்ளார். இவரது தாய் தந்தை பெயர்  கிருஷ்ணமூர்த்தி - பரமேஸ்வரி. 1994ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி பிறந்தவரான மகாவிஷ்ணு, சிறு வயதிலிருந்தே பேச்சுத் திறமை மிக்கவராக இருந்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப் போவது யாரு என்ற நிகழ்ச்சியில் சிறுவனாக இருந்தபோது பேசி பங்கெடுத்துள்ளார். அங்கு தொடங்கிய இந்த பேச்சுதான், பின்னர் அதுவே அவருக்குப் பின்னர் தொழிலாக மாறிப் போனது.





ஆன்மீக சொற்பொழிவுகளில் இறங்கினார். ஆன்மீகப் பேச்சாளராக மாறினார். பிறகு அப்படியே தன்னம்பிக்கை பேச்சாளராக உருவெடுத்தார். அமைப்பை உருவாக்கி அதன் மூலம் செயல்படத் தொடங்கினார். பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார். யூடியூப் சானல் ஆரம்பித்தார். அதன் மூலம் தனது பேச்சுக்களை ஒளிபரப்பி பலரையும் கவர்ந்திழுத்தார். ஆன்மீகப் பேச்சுக்களை விரும்புவோர் மத்தியில் இவரது வீடியோக்கள் பாப்புலர் ஆகின.


தனது அமைப்பின் மூலம் தினசரி அன்னதானத்திற்கும் இவர் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறாராம். ஒரு நாளைக்கு 500 பேருக்கு சாப்பாடு போடுகிறார்களாம். அதேபோல பரம்பொருள் யோகா என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி அதிலும் பலரையும் ஈடுபடுத்தி வருகிறாராம். குருகுல முறையை தீவிரமாக ஆதரிப்பவர் இவர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், டாக்டர்கள், என்ஜீனியர்கள், பிசினஸில் ஈடுபடுவோர் என பலருக்கும் தனது பரம்பொருள் யோகாவை சொல்லிக் கொடுக்கிறார். ஐடி ஊழியர்களுக்காக கேம்ப்புகளும் நடத்துகிறாராம்.




தமிழ்நாட்டு அமைச்சர்கள் பலரையும் கூட சந்தித்து அவர் புகைப்படம் எடுத்துள்ளார். அப்படித்தான் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷையும் சந்தித்து இவர் புகைப்படம் எடுத்துள்ளார். வள்ளளலாரின் திருவருட்பாவை பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அப்போது அவர் வைத்தாராம்.


வெறும் வீடியோக்கள் அளவிலேயே புழங்கி வந்த மகாவிஷ்ணு தனது அசோக் நகர் பேச்சால் இப்போது பெரிய அளவில் வெளிச்சம் பெற்றுள்ளார்.. இதற்குத்தான் அவர் ஆசைப்பட்டாரா என்று தெரியவில்லை. எது எப்படியோ, மகாவிஷ்ணுக்கு இந்த விவகாரம் பெரும் வெளிச்சம் போட்டுக் கொடுத்து விட்டது.. இது அடுத்தடுத்து எங்கே போகப் போகிறது என்று தெரியவில்லை.


புகைப்படங்கள்: பரம்பொருள் பவுண்டேஷன்


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்