அதிமுக தொடர்பான வழக்கை.. தேர்தல் ஆணையமே விசாரிக்கலாம்.. சென்னை ஹைகோர்ட் உத்தரவு

Manjula Devi
Feb 12, 2025,01:39 PM IST
சென்னை:  அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையமே விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் தேர்தல் ஆணையம்  விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது. அதேபோல் முன்னாள் எம்.பி ஓ பி ரவீந்திரநாத் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது . இந்த மனு மீது விசாரணை கடந்த ஏழாம் தேதி நடைபெற்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் வழக்கறிஞர் கல்யாண சுந்தரம் ஆஜரானார்.

அப்போது கட்சியில் எந்த பிளவும் இல்லை. இது தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உரிமை இல்லை. தேர்தல் நெருங்கும் போது ஆணையம் கட்சியை முடக்கினால் ஏற்படும் பேரிழப்பை சரி செய்ய முடியாது என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கில் வரும் பிப்ரவரி 12ஆம் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.



இந்த நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன், ஜி அருள்முருகன் ஆகிய அடங்கிய அமர்வில் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான  தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. அதாவது அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்த தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை செய்யும். ஆணையமே  முடிவு செய்யலாம் என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது. காரணம், தற்போது அதிமுகவில் செங்கோட்டையனும் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இன்று கோபிச் செட்டிப்பாளையத்தில் அவசர ஆலோசனைக் கூட்டத்தையும் செங்கோட்டையன் கூட்டியுள்ளார். நாளை எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அவர் திரும்பினால் கடைசி நேரத்தில் சிக்கல் பெரிதாகி, ஓபிஎஸ்ஸுடன், செங்கோட்டையனும் கை கோர்த்தால், சின்னம் முடக்கப்படும் அபாயம் உள்ளது.

இதனால் வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி எந்த சின்னத்தில் போட்டியிடுவார். அப்படியே போட்டியிட்டாலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னடைவு தான் ஏற்படும் என கூறப்படுகிறது.