உங்க பேச்சுக்கு திரிஷாதான் வழக்கு தொடர்ந்திருக்கணும்.. மன்சூர் அலிகானுக்கு ஹைகோர்ட் கொட்டு!

Meenakshi
Dec 11, 2023,03:46 PM IST

சென்னை: பொது வெளியில் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்ளலாமா? என்று நடிகர் மன்சூர் அலிகானை கண்டித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் அவர் பேசிய பேச்சுக்கு நடிகை திரிஷாதான் வழக்குத் தொடர்ந்திருக்க வேண்டும் என்றும் கண்டித்துள்ளது.


கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசியனார் மன்சூர் அலிகான். இவரது பேச்சு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்திற்கு அனைத்து தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பும் கண்டனங்களும் வழுத்து வந்தது. திரிஷாவும் டிவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது தாமாக முன் வந்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு பரிந்துரை செய்தது. இதன் பின்னர் சென்னை ஆயிரம் விளக்கு மகளிர்  போலீசார் நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஆஜராகி மன்சூர் அலிகான் விளக்கம் அளித்து வந்தார். அதனைத் தொடர்ந்து திரிஷாவிடம்  எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு என மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார் மன்சூர் அலிகான்.




இதைத் தொடர்ந்து த்ரிஷாவும் தனது எக்ஸ் தள பக்கத்தில் தவறு செய்வது மனித இயல்பு மன்னிப்பது தெய்வ பண்பு என பெருந்தன்மையாக பதிவிட்டிருந்தார்.  சரி இத்தோடு இந்த பஞ்சாயத்து முடிஞ்சாச்சு.. அடுத்த பஞ்சாயத்தைப் பார்க்கலாம் என்று "தமிழ் கூறும் நல்லுலகம்" அடுத்த வேலைக்கு ஆயத்தமானபோது, மன்சூர் அலிகான் மறுபடியும் பஞ்சாயத்தைக் கூட்டினார்.


தற்போது நடிகை த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் மன்சூர் அலிகான் மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். அதில் தனது வீடியோவை முழுமையாக பார்க்காமல், 3 பேரும் தன்னைப் பற்றி அவதூறாக பேசியதாகவும், இதனால் மூவரும் தலா ஒரு கோடி மான நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.


இந்த மனு இன்று நீதிபதி என்.சதீஷ்குமார் முன் நிலையில் விசாரணைக்கு வந்தது.  அப்போது, பொது வெளியில் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்ளலாமா? மன்சூர் அலிகான் பேசியதற்கு நடிகை த்ரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். மன்சூர் அலிகான் தொடர்ச்சியாக இது போன்ற சர்ச்சையான செயல்களில் ஈடுபடுகிறார். தாம் எந்த தவறும் செய்யவில்லை என தற்போது கூறும் மன்சூர் அலிகான் கைது நடவடிக்கைகளில் தப்பிப்பதற்காகவா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்?  என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.


அப்போது, மன்சூர் அலிகான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மன்சூர் அலிகான் பேசியது தொடர்பாக முழு வீடியோவையும் தாக்கல் செய்வதாகவும், அவரைப் பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டதை நடிகை த்ரிஷா நீக்க வேண்டும் எனவும் வாதிட்டார். இதற்கு த்ரிஷா தரப்பு வழக்கறிஞர் குறுக்கிட்டு, இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவரே அமைதியாக உள்ள நிலையில் தற்போது எதற்கு மன்சூர் அலிகான் வழக்கு தொடர்ந்து உள்ளார் என தெரியவில்லை என்று வினவினார். 


இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கு குறித்து நடிகை த்ரிஷா, குஷ்பூ மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை டிசம்பர் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.