4 வருட வெயிட்டிங் ஓவர்.. ஹைகோர்ட்டும் பச்சைக் கொடி.. நாளை திட்டமிட்டபடி வருகிறது.. அயலான்!

Manjula Devi
Jan 11, 2024,06:00 PM IST

சென்னை:  அயலான் திரைப்படத்திற்கு விதிக்கப்பட இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. இதையடுத்து படம் திட்டமிட்டபடி நாளை திரைக்கு வருகிறது.


அயலான் படத்தைத் தயாரித்துள்ள கேஜஆர் ஸ்டுடியோ நிறுவனம், எல்.எஸ் சேலஞ்ச் விளம்பர நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் பணம் தரவேண்டி இருந்தது. இதனால் பணம் தரும் வரை படத்தை திரையிட விட மாட்டோம் என பைனான்சியர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், படத்தைத் திரையிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.


இதையடுத்து கேஜேஆர் நிறுவனம் தான் வழங்கிய வேண்டிய ரூ. 1 கோடியில், பாதித் தொகையை அதாவது ரூ. 50 லட்சத்தை இன்று செட்டில் செய்தது. மீதப் பணத்தை ஏப்ரல் 10ம் தேதிக்குள் தருவாக கோர்ட்டில் உத்தரவாதம் தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து, இடைக்காலத் தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 




இதன் மூலம் அயலான் நாளை ரிலீஸாவது உறுதியாகி விட்டது. படம் வருவது உறுதியானதைத் தொடர்ந்து  ஆன்லைன் புக்கிங் ஜோராக நடைபெற்று வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் எப்போதும் காதல், காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் என கலந்து கட்டி நடிப்பது வழக்கம். ஆனால் இப்படத்தில் சற்று வித்தியாசமாக  சயின்ஸ் பிக்சன் கதையில் முதன்முதலாக நடித்து அசத்தியுள்ளார். 


இப்படத்தின் கதை ஏலியன்ஸ் பின்னணியில் அமைந்துள்ளதாம்.. அதாவது பூமியில் விவசாயத்தை அழிக்க, வில்லன், ஏலியனை அனுப்புகிறார். அதை சிவகார்த்திகேயன் எப்படி அழிக்கிறார் என்பதை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. அயலான் படத்தில் வரும் ஏலியன் கதாபாத்திரத்துக்கு நடிகர் சித்தார்த் டப்பிங் பேசி உள்ளார். இப்படம் மிகப்பெரிய ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் திரையுலகம் காத்திருக்கிறது.


ரவிக்குமார் இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத்தா சிங், கருணாகரன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.


2020ம் ஆண்டு இப்படத்தின் உருவாக்கம் தொடங்கியது. கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகளால் நீண்ட தாமதம் ஆகி விட்டது. தற்போது பல்வேறு சவால்களை தகர்த்தெறிந்து இப்படம் திரைக்கு வர இருப்பதால் ரசிகர்கள் உற்சாகமுடனும், ஆர்வத்துடனும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.