கள்ளச்சாராயத்தால் பலியானோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது ஏன்.. சென்னை ஹைகோர்ட் கேள்வி

Meenakshi
Jul 05, 2024,10:26 PM IST

சென்னை:   கள்ளக்குறிச்சி விஷசாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு எப்படி 10 லட்சம் இழப்பீடு வழங்க முடியும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 19ம் தேதி விஷச்சாராயம் குடித்து  150க்கும் மேற்பட்டோர் பதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 65 பேர் உயிர் இழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ. 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.




அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னையை சேர்ந்த முகமது கோஸ் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், கள்ளச்சாராயம் குடிப்பது சட்டவிரோத செயல். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை பாதிக்கப்பட்டவர்களாக கருதக் கூடாது. தீ விபத்து உள்ளிட்ட விபத்துக்களில் பலியாவோருக்கு குறைந்த இழப்பீடு வழங்கும் நிலையில், விஷச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு எந்த அடிப்படையில் அதிக இழப்பீடு வழங்கப்படுகிறது என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை. 


விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகளோ, சமூக சேவகர்களோ, சமூகத்துக்காக உயிர் தியாகம் செய்தவர்களோ அல்ல என்பதால், அவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வழக்கு இன்று  தற்காலிக தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அடங்கிய முதன்மை பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, விஷசாராயம் குடித்து மரணமடைந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது அதிகம். இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும்? எனக் கேள்வி எழுப்பியதுடன்,இந்த தொகை வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை  அறிந்து தெரிவிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.