ஓசூர் காசி விஸ்வநாதர் கோவிலின் நிலம் ஆக்கிரமிப்பு.. உடனே அகற்ற அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

Su.tha Arivalagan
Feb 29, 2024,01:07 PM IST

சென்னை: ஓசூர் காசிவிஸ்வநாதர் கோவிலின் நில  ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற இந்து அறநிலைய துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சூசூவாடி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த  அருள்மிகு காசிவிஸ்வநாதர்  கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான பல நிலங்கள் ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமாக உள்ளன.


அதில் ஓசூர் சூசூவாடி கிராமத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவில் நிலங்களை கடந்த 2015 ம் ஆண்டு முதல்  தனி நபர்கள் பலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு  தொடர்ந்துள்ளார்.




இந்த மனு நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம், ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், காசிவிஸ்வநாதர் கோவில் ஆக்கிரமிப்பு தொடர்பாக கடந்த 2015ம் ஆண்டு மற்றும் 2018 ம் ஆண்டுகளில் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக காசிவிஸ்வநாதர்  கோவில் நிலத்திற்கு சிலர் சட்டவிரோதமாக பட்டா பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.


இந்து அறநிலைய துறை தரப்பில், கோவில் நிலத்தை  சொந்தமாக்க தனிநபர்களால் போடப்பட்ட சட்டவிரோத பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஓசூர் சூசூவாடி காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான நில அக்கிரமிப்புகள் தொடர்பாக  விரைந்து விசாரணை நடத்தி, காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து அறநிலைய துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.