தங்கலான், கங்குவா படத்திற்கு வந்த புதிய சிக்கல்.. தலா ரூ. 1 கோடி.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!

Meenakshi
Aug 12, 2024,06:38 PM IST

சென்னை: நடிகர் விக்ரம் நடித்துள்ள தங்கலான் மற்றும் சூர்யா நடித்துள்ள கங்குவா ஆகிய படங்களை வெளியிடும் முன்னர் தலா ஒரு கோடி டிபாசிட் செய்ய வேண்டும் என படத்தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பல விஐபிகள் பணத்தை கொடுத்து வைத்திருந்தனர். இவர் சென்னையை சேர்ந்தவர் ஆவார். அந்த பணத்தை அவர் பலருக்கு கடனாக கொடுத்துள்ளார். இந்த கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் நிதி இழப்பு அவருக்கு ஏற்பட்டது. இதனால் அவர் திவாலானவராக அறிவிக்கப்பட்டார். அதன்பின்னர் அவர் உயிர் இழந்து விட்டார். உயிர் இழந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸிடம் கடன் வாங்கியவர்களிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்க உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.




அர்ஜூன்லால் சுந்தரதாஸிடம் ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஞானவேல் ராஜா, ஈஸ்வரன் ஆகியோர் கடன் வாங்கியுள்ளனர். அதுவும் 10 கோடியே 35 லட்சம் ரூபாயை 2013ம் ஆண்டு வாங்கியுள்ளனர்.அந்த தொகையை வட்டியுடன் திருப்பி கேட்டு சொத்தாட்சியார் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு உத்தரவின்படி ஞானவேல் ராஜாவும், ஈஸ்வரனும் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் ஞானவேல்ராஜா மற்றும் ஈஸ்வரன் ஆகியோரை திவாலானவர்களாக அறிவிக்க சொத்தாட்சியர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கிற்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளனர். அந்த உத்தரவில் தங்கலான் படத்தை வெளியிடும் முன் அதாவது நாளை மறுநாளுக்குள் ஒரு கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், அதேபோல, அடுத்த படமான கங்குவா படத்தை வெளியிடுவதற்கு முன் அதாவது ஆகஸ்ட் 10க்குள் ஒரு கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், பணம் டெபாசிட் செய்தது குறித்து பட வெளியீட்டுக்கு முன் ஹைகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.