கிண்டி மருத்துவமனை டாக்டருக்கு கத்திக்குத்து..விக்னேஷ்வரனுக்கு ஜாமின்..காவல்துறைக்கு ஹைகோர்ட் கேள்வி

Meenakshi
Dec 17, 2024,05:45 PM IST

சென்னை: கிண்டி கலைஞர் மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷ்வரனுக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதேசமயம், தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்காததால்தான் கத்தியால் குத்தியதாக விக்னேஷ்வரன் கூறியுள்ளார். எனவே சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.


கடந்த நவம்பர் 14ம் தேதி சென்னை கிண்டி மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் டாக்டர் பாலாஜியை, விக்னேஷ்வரன் என்ற இளைஞர் சரமாரியாக கத்தியால் குத்தினார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விக்னேஷ்வரனை கைது செய்த போலீசார் விசாரித்ததில் தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்காததால் தான் மருத்துவரை தாக்கியதாக இளைஞர் கூறினார்.




மருத்துவரை தாக்கிய விக்னேஷ் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் விக்னேஷ் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. அப்போது, இது குறித்து  விசாரணை நடந்து வருவதால் ஜாமின் வழங்கக் கூடாது என கூறப்பட்டது. காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி விக்னேஷின் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்னேஷ்வரன் தரப்பில் மனு செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட விக்னேஷின் வழக்கறிஞர்கள், தனது தாய்க்கு முறையாக சிகிச்சை வழங்காத காரணத்தினால் தான் கத்திக்குத்து சம்பவம் நடந்திருக்கிறது. நோயாளிக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் இது போன்ற சம்பவம் நிகழ்ந்திருக்காது என்று எடுத்துக் கூறினர்.


இதைக் கேட்ட, நீதிபதி அரசு தரப்பிடம், சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு அரசுத் தரப்பு பதில் அளிக்கவில்லை. இதையடுத்து  விக்னேஷ்வரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 


மறு உத்தரவு வரும் வரை வேலூரில் தங்கியிருக்க வேண்டும். சந்துவாச்சாரி காவல் நிலையத்தில் தினமும் காலை  கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்