கோயம்புத்தூரில் பிரதமர் மோடி ரோடுஷோ நடத்தலாம்.. சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

Su.tha Arivalagan
Mar 15, 2024,07:51 PM IST

சென்னை: கோயம்புத்தூரில் பிரதமர் நரேந்திர மோடி ரோடு ஷோ நடத்த அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.


தேர்தல் காலம் என்பதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். இன்று கூட அவர் கன்னியாகுமரிக்கு வந்து அங்கு நடந்த பாஜக கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அடுத்து அவர் வருகிற திங்கள்கிழமை கோவைக்கு வரவுள்ளார்.


கோவை வரும் பிரதமர் மோடி, அங்கு 4 கிலோமீட்டர் தொலைவுக்கு ரோடுஷோ நடத்த திட்டமிட்டுள்ளது பாஜக. இதுதொடர்பாக அனுமதி கோரி மாவட்ட காவல்துறையிடம் பாஜக சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அனுமதி மறுத்தது கோவை காவல்துறை. கோவையில் வெடிகுண்டு வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளதால் ரோடுஷோவால் பாதுகாப்பு பிரச்சினைகள் எழலாம் என்று காவல்துறை கூறியிருந்தது.




இதையடுத்து உயர்நீதிமன்றத்தை அணுகி அனுமதி கோரி மனு செய்தது கோவை மாவட்ட பாஜக. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் கூறுகையில், கோவையில் எந்த அரசியல் கட்சிக்கும் இதுபோன்று ரோடுஷோ நடத்த அனுமதி தரப்படுவதில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வாறு அனுமதி மறுக்கப்படுகிறது. யாரையும் குறிப்பிட்டு பாரபட்சமாக காவல்துறை நடக்கவில்லை என்று விளக்கம் தரப்பட்டது.


விாசரணைக்குப் பின்னர் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பிரதமருக்கு ஏற்கனவே சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகல் இருப்பதால் காவல்துறைக்கு இதில் பெரிதாக வேலை இருக்கப் போவதில்லை. எப்போது பேரணி நடத்தலாம், எவ்வளவு தூரத்திற்கு நடத்தலாம் என்பது குறித்த விவரங்களை காவல்துறையே தீர்மானித்து தெரிவிக்கலாம் என்று கூறி உத்தரவிட்டார்.