பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. சென்னை ஹைகோர்ட் வழக்கறிஞர் சங்கம் கண்டனம்

Su.tha Arivalagan
Jul 07, 2024,07:10 PM IST

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர்  ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டுக்கு அருகே 10க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பலால், ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது படுகொலை தமிழ்நாட்டை மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக முதலில் 8 பேரும், பின்னர் 3 பேரும் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




முதல் கட்ட விசாரணையில் இது பழிக்குப் பழி வாங்கும் கொலை என்று தெரிய வந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக சங்கத் தலைவர் ஜி மோகனகிருஷ்ணன் மற்றும் செயலாளர் ஆர் கிருஷ்ணகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கறிஞர் கே ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டுக்கு வெளியே வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட செயல் குறித்து அதிர்ச்சியும் சோகமும் அடைந்தோம். இந்த கோரமான கொலைச் செயலை கடுமையாக கண்டிக்கிறோம். காவல்துறை விசாரணையை விரைவுபடுத்தி, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டப்படி அவர்களைத்  தண்டிக்க வேண்டும்.


ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர், நண்பர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.