கார்த்திக் ராஜாவின் முதல் படம்.. வடிவேலுவுக்கு புது அடையாளம் தந்த மாயி.. மறக்க முடியாத சூரியபிரகாஷ்!

Meenakshi
May 27, 2024,01:46 PM IST

சென்னை: மாணிக்கம், மாயி, திவான் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சூர்யபிரகாஷ் இன்று காலமானார். அவரது படங்கள் குறைவுதான் என்றாலும் கூட பல வகைகளில் அவை முத்திரை பதித்தவை.. பலருக்கு முக்கியமான படங்களும் கூட.


1996ம் ஆண்டு வெளியான படம்தான் மாணிக்கம். ராஜ்கிரண் மற்றும் வனிதா விஜயகுமார் ஜோடியாக நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  இந்தப் படம்தான் இசையமைப்பாளர் கார்த்திக்ராஜாவுக்கு முதல் படம். பாடல்கள் பேசப்பட்டாலும் கூட படம் பெரிய அளவில் போகவில்லை. இந்தப் படத்தை இயக்கியவர் சூர்யபிரகாஷ்


2000மாவது வருடம் வந்த படம் மாயி. சரத்குமார், மீனா நடிப்பில் வெளியான இப்படம் வடிவேலுவின் காமெடியால் பிரபலமாக பேசப்பட்டது. இப்படத்தில் வடிவேலு மிகப் பெரிய அளவில் காமெடியில் கலக்கியிருப்பார். அவருக்கு ஸ்டார் அந்தஸ்து கொடுத்த படங்களில் மாயி முக்கியமானது. அதிலும் குறிப்பாக, " மாயி அண்ணன் வந்துருக்காக, மாப்பிள்ளை மொக்கச்சாமி வந்துருக்காக... மற்றும் நம் உற்றார் உறவினரெல்லாம் வந்துருக்காக... வாம்மா மின்னல்..."  என்ற காமெடி இன்றும் ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகின்றனர். இதையும் சூர்யபிரகாஷ்தான் இயக்கியிருந்தார்.




மாயி படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து சரத்குமாரை வைத்து திவான் படத்தை இயக்கினார் சூர்ய பிரகாஷ். இப்படம் மாயி படம் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனை அடுத்து சூர்ய பிரகாஷ் தெலுங்கில் இயக்கிய படமும் தோல்வியை தழுவியது. அடுத்து அடுத்து தோல்வியை தழுவியதால் அடுத்து எந்த படங்களையும் சூர்ய பிரகாஷ்  இயக்கவில்லை. அதன் பின்னர் அவர் என்ன ஆனார் என்று கூட தெரியவில்லை. பல இயக்குநர்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. பீக்கில் இருக்கும் வரைதான் உலகம் அவரைப் பார்க்கிறது.. அவர்கள் பீல்ட் அவுட் ஆன பிறகு அவர்களைப் பற்றி யாருமே நினைத்துக் கூட பார்ப்பதில்லை.


இந்நிலையில்,  மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார் சூர்யபிரகாஷ் இவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.  மாயி, திவான் படத்தில் நடித்த சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் வெளியிட்டள்ளார். அதில்,


எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றார்.