நீதியை காக்க தன்னுயிர் தந்த மன்னராட்சி செய்த இடம் மதுரை.. முதல்வர் மு க ஸ்டாலின் பெருமிதம்!

Manjula Devi
Aug 08, 2024,02:32 PM IST

சென்னை:  மதுரையில் நான்கு நாட்கள் நடைபெறும் மாமதுரை திருவிழாவை முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்து, நீதியை காக்க தன்னுயிர் தந்த மன்னராட்சி நடைபெற்ற இடம் மதுரை என முதல்வர் மு க ஸ்டாலின் மதுரையை பற்றி பெருமிதமாக பேசியுள்ளார்.


மதுரையில் இன்று முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை 4 நாட்கள் மாமதுரை விழா  நடைபெற உள்ளது. இந்த விழாவில்  தொல்லியல் பயணம், கலைத் திருவிழா, இரட்டை அடுக்கு பேருந்து பயணம், பலூன் திருவிழா, உணவு திருவிழா, வானவேடிக்கை நிகழ்ச்சி, கிரிக்கெட், கால்பந்து போட்டி, மாரத்தான், சைக்ளதான் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.




யங் இந்தியன்ஸ் அமைப்பின் சார்பிலும் நடக்கும் மாமதுரை திருவிழா தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில் நகரின் பல்வேறு பகுதிகளில் மதுரை மாநகரின் பண்பாட்டை பறைசாற்றும் விதமாக சுவர்களில் ஓவியம் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள் மக்களை  வெகுவாகக் கவர்ந்துள்ளன. மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் இதனை கண்டு ரசித்து வருகின்றனர்.


இந்த நிலையில் மாமதுரை விழாவை முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். அப்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியதாவது:


பல்வேறு வரலாற்றுப் பெருமைகளைக் கொண்டது மதுரை மாநகரம். மாமதுரை விழா மூலம் மதுரை மாநகரம் புத்துயிர் பெறுகிறது.இந்தியாவின் மிக பழமையான நகரமாக மதுரை திகழ்கிறது. 2000 ஆண்டு வரலாறு கொண்டது மதுரை.

பாண்டிய மன்னர்கள் தலைநகராக ஆட்சி செய்த நகரம். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியப் பாண்டியன் ஆட்சி செய்த நகரம்.




புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் இருக்கும் கோயில் நகரம் இது. அனைத்துக் கலைகளும் ஒருங்கே இருக்கும் பண்பாட்டுச் சின்னமாக இந்தக் கோவில் கருதப்படுகிறது. புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா, மாபெரும் பண்பாட்டு விழாவாக இது நடைபெற்று வருகிறது. 


1866-ஆம் ஆண்டே நகராட்சியாக ஆன ஊர் இது.  1971-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாநகராக மதுரையை அறிவித்தது மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.


தவறு செய்தவர் மன்னனே ஆனாலும் மண்ணைக் கண்ணகி கேள்வி கேட்ட மண் இது. நீதியைக் காக்க தன்னுயிர் தந்த மன்னராட்சி செய்த இடம் இது என மதுரைக்காரர்கள் மட்டுமல்ல அனைத்து ஊர்க்காரர்களும் இந்த ஊரைக் கொண்டாடலாம் என்று மதுரையைப் பற்றி பெருமையாக பேசி உள்ளார்.