"சிறிய பாடல்களுக்குள் ஆழ்மன உணர்வுகள்"..கபிலன் வைரமுத்துவின் வித்தியாசமான ஆல்பம்!

Manjula Devi
Feb 02, 2024,04:31 PM IST

சென்னை: சிறிய பாடல்களுக்குள் ஆழ்மன உணர்வுகளை சொல்ல வேண்டும் என்பதுதான் எண்ணம் என புதிய இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ள பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து கூறியுள்ளார்.


ஐந்து கவிதைகளை தேர்ந்தெடுத்து அவற்றை சின்னஞ்சிறு இசை ஆல்பமாக தயாரித்து உள்ளார் கபிலன் வைரமுத்து. புதிய இயக்குனராக உருவாக நினைக்கும் இளைஞர்கள் இந்தப் பாடல்களை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கபிலன் வைரமுத்து அறிவித்துள்ளார்.


எழுத்தாளரும், பாடலாசிரியராருமான கபிலன் வைரமுத்து எழுதிய கடவுளோடு பேச்சுவார்த்தை, மனிதனுக்கு அடுத்தவன், மலைக்கு ஒதுங்கும் மண்பொம்மை போன்ற பல்வேறு கவிதை நூல்களில் இருந்து ஐந்து கவிதைகளை தேர்ந்தெடுத்துள்ளார்.




இந்தக் கவிதைகளை மூன்று நிமிட சிறிய பாடலாக உருவாக்கியுள்ளார். கபிலன் வைரமுத்து மற்றும் இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இணைந்து இந்த சின்னஞ்சிறு பாடல்கள் ஆல்பத்தை தயாரித்து உள்ளனர். தில்லை, பாலை ,சிந்துவாரம் , புன்னை, மகிழம் என சங்கப் புலவர் கபிலர் பாடிய 99 வகையான பூக்களில் ஐந்து பூக்களின் பெயர்களை தான் தயாரித்துள்ள ஐந்து பாடல்களுக்கு சூட்டியுள்ளார். 


இந்தப் பாடல்களை ரம்யா, ராம்குமார், ராம்நாத் பகவத், அதிதி பவராஜு ,ஷோபிகா முருகேசன், புவனா ஆனந்த் ஆகியோர் பாடியுள்ளனர். கபிலன் வைரமுத்து தயாரித்துள்ள பாடல்களை இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளராக விரும்பும் இளைஞர்கள் தங்கள் மாதிரி படப்பிடிப்புக்கு இந்த பாடல்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கி உள்ளார்.


மேலும் இசை ஆல்பங்களை பிப்ரவரி முதல் வாரம் தொடங்கி ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட இசைக்குழுவினர் திட்டமிட்டுட்டுள்ளதாகவும்  அறிவித்துள்ளனர். கபிலன் வைரமுத்து தற்போது இந்தியன் 2, இந்தியன் 3, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் எழுத்தாளராகவும் ,

பாடல் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.




இந்த இசை ஆல்பங்களை பற்றி அணுவை துளைத்து ஏழ்கடல் புகுத்துவது மாதிரி சிறிய பாடல்கள் ஆழ்மன உணர்வுகளை சொல்ல வேண்டும் என்பதுதான் எண்ணம் என்று இசை ஆல்பத்தின் அறிமுக காணொளி வாயிலாக கபிலன் வைரமுத்து கூறியுள்ளார்.


ஏற்கனவே கபிலன் வைரமுத்து மற்றும் பாலு கூட்டணியில் சிலம்பரசன் பாடிய டிமானிடேஷன் ஆந்தம் பாடலும், மது கலாச்சாரத்திற்கு எதிராக நடிகர் டி.ஆர் ராஜேந்தர் பாடிய ஏந்திரு அஞ்சலி ஏந்திரி பாடலும் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.