வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு .. 2 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு..!

Manjula Devi
Aug 17, 2024,07:56 PM IST

சென்னை: வங்கக்கடலில் நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்து இரண்டு நாட்களில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.


தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. தற்போது பகல் நேரங்களில் வெயில் வாட்டி எடுத்தாலும் மாலை நேரங்களில்  இருள் மேகங்கள் சூழ்ந்து இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மீண்டும் நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.




இதற்கிடையே வங்கக்கடலில் தற்போது  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ் பகுதி அடுத்த இரண்டு நாட்களில் வடக்கு வடமேற்கு திசையில் நோக்கி நகர்ந்து வங்கதேச மற்றும் மேற்குவங்கம் கடற்கரை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


இந்த நிலையில் இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும்  இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.


மிக கனமழை: 


கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


கனமழை: 


நீலகிரி திண்டுக்கல் திருப்பூர் தேனி மதுரை விருதுநகர் தூத்துக்குடி கோவை ஆகிய எட்டு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்