48 மணி நேரத்தில் புயல்.. வலுப் பெற்றது தாழ்வுப் பகுதி.. சென்னையில் இடைவிடாத கனமழை!

Su.tha Arivalagan
Nov 29, 2023,05:49 PM IST

சென்னை:  வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுப்பெற்றுள்ளது. இதனால் கடலோல வட மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை புறநகர்ப் பகுதிகளில் காலையிலேயே மழை வெளுத்து வாங்கி விட்டது.


வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து தற்போது வங்க கடலில் மிச்சாங் என்ற புயல் உருவாக உள்ளது. இதன் காரணமாக சென்னையில் நள்ளிரவு முதலே விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. கிண்டி, சைதாப்பேட்டை ,அசோக் நகர் ,தேனாம்பேட்டை, சேப்பாக்கம், உள்ளிட்ட நகரின் பல இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் சுமார் ஒரு மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.


இந்த நிலையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக உருவாக கூடும். இந்த புயலுக்கு மிச்சாங் என பெயரிடப்பட்டுள்ளது.




புயல் சின்னம் காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மூன்று நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


இன்று மழை நிலவரம்:


தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.


இதன் எதிரொலியாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கன மழையை எதிர்பார்க்கலாம்.