மத்திய மேற்கு வங்கக் கடலில்.. உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. நமக்கு மழை எப்படி?

Manjula Devi
Jul 15, 2024,05:42 PM IST

சென்னை: மத்திய மேற்கு வங்கக் கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் இன்று முதல் தமிழகத்தில் ஏழு நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 


இந்த நிலையில் இன்று மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாம். இதனால் தமிழகத்தில்  புதுவை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று முதல் ஏழு நாட்கள் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இன்று மிக கனமழை: 




கோவை மற்றும் நீலகிரியில் இன்று ஒரு சில இடங்களில மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மிக கன மழை பெய்யும் என்பதால் கோவை நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


இன்று கனமழை:


கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், சேலம், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை கனமழை: 


நீலகிரி மற்றும் கோவையில் நாளை ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.


18.07.2024 மற்றும் 19.07.2024 : 


மத்திய வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் அரபிக்கடல் பகுதிகளில்  சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும்,  கர்நாடக கடேலார பகுதிகள், கேரள கடேலார பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் இடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.