வங்கக் கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களுக்கு மிக கன மழைக்கு வாய்ப்பு!

Manjula Devi
May 22, 2024,10:43 AM IST
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்தது போல் தென்மேற்கு, அதனை ஒட்டிய மத்திய வங்க கடலில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுபகுதி வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை மறுநாள் அதாவது மே 24ஆம் தேதி மத்திய வங்கக்கடலில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். மேலும் இந்த  தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இதுவரை எந்த தகவலையும் வானிலை மையம் உறுதி கூறவில்லை.



இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒருவேளை வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்தால் தமிழ்நாட்டிற்கு மழைக்கு வாய்ப்புள்ளது. ஆனால் இது தமிழகத்தை விட்டு விலகிச் செல்வதால் வரும் நாட்களில் மழையின் தீவிரம் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடற்கரை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இருப்பதால் இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை  பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மே 24ஆம் தேதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தெற்கு கேரளா பகுதிகளிலும், தென் தமிழகப் பகுதிகளிலும் மழைக்கான வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும், கடலோரப் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் அடுத்த நான்கு நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.