இந்துக்களுக்கு மட்டுமல்ல.. உலகத்தில் உள்ள அனைவருக்கும் சொந்தமானவர் ராமர்.. பரூக் அப்துல்லா

Su.tha Arivalagan
Dec 30, 2023,04:36 PM IST

பூன்ச்: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பாடுபட்ட அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். ராமர், இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல.. உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் சொந்தமானவர் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.


அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ஜனவரி 22ம் தேதி ராமர் சிலையை நிறுவும் விழா நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூன்ச் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா திறப்பு விழாவுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் சகோதரத்துவம் மறைந்து வருகிறது. அதை மீண்டும் உயிர்ப்பித்து வலுப்படுத்த வேண்டும். அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படவுள்ளது. இந்தக் கோவில் வர வேண்டும் என்று பாடுபட்ட அனைவரையும் வாழ்த்துகிறேன்.




ராமர் இந்துக்களுக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் சொந்தமானவர் அவர்.  மதச்சார்பற்று அனைவருக்கும் அவர் கடவுள். அப்படித்தான் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது. சகோதரத்துவம், அன்பு, ஒற்றுமை, ஒருவருக்கு ஒருவர் உதவுதல் ஆகியவற்றை வலியுறுத்தியவர் ராமர். மதம் இனப் பாகுபாடில்லாமல் அனைவரையும் கை தூக்கி விட வேண்டும் என்ற செய்தியை விட்டுச் சென்றவர் ராமர் என்று கூறினார் பரூக் அப்துல்லா.


ராமல் சிலை பிரதிஷ்டை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளவுள்ளனர். நாடு முழுவதிலுமிருந்து 4000 துறவிகளும் இதில் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.