முருகனின் அருளை அள்ளி தரும் தைப்பூச திருவிழா.. உலகெங்கும் தமிழர்கள் கொண்டாட்டம்

Aadmika
Feb 05, 2023,10:03 AM IST
சென்னை : தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்குரிய முக்கியமான விழாக்களில் ஒன்று தைப்பூசம். தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரமும், பெளர்ணமியும் இணையும் நாளை தைப்பூச திருநாளாக உலகம் முழுவதிலும் உள்ள முருக பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆன்மிகத்தில் பொதுவாக 9, 18, 7 போன்ற எண்கள் பல வகையிலும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. அப்படி தமிழ் மாதங்களில் பத்தாவது மாதமாகிய தை மாதமும், 27 நட்சத்திரங்களில் 8 வது நட்சத்திரமாகிய பூசமும் சேர்ந்து வருவது இந்த தைப்பூசத்திற்கே உரிய தனிச்சிறப்பாகும். முருகப் பெருமானுக்கு மட்டுமல்ல பல தெய்வங்களையும் வழிபட வேண்டிய முக்கியமான நாள் இந்த தைப்பூசம்.



உலக உயிர்கள் தோன்ற துவங்கியது இந்த தைப்பூச நாளில் தான் என புராணங்கள் சொல்கின்றன. முருகப் பெருமானுக்கு இணையாக கொண்டாடப்படும் வேலை, அவர் பராசக்தியிடம் இருந்து பெற்ற நாள் இந்த தைப்பூசத் திருநாள். மார்கழி திருவாதிரையில் தனியாக ஆனந்த தாண்டவம் ஆடிய சிவ பெருமான், அன்னை பார்வதியுடன் இணைந்து சிவ-சக்தி சொரூபமாக ஆனந்த தாண்டவம் நிகழ்த்தி காட்சி கொடுத்த நாள் இந்த தைப்பூசம். சிவனை போன்று பார்வதி தேவியும் தனியாக ஆனந்த தாண்டவம் நிகழ்த்திய நாளும் இதே தைப்பூசம் தான்.

ஜோதிடத்தில் மங்களகாரகன் என குறிப்பிடப்படும் குரு பகவான் அவதரித்ததும் இந்த நாளில் தான். வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என உலக உயிர்கள் அனைத்திடமும் அன்பு செய்ய வேண்டும் என போதித்த வடலூர் வள்ளலார் மோட்சம் பெற்ற தினம் இன்று தான். இன்று வடலூர் சத்ய ஞான சபையில் ஏழு திரை விலக்கு ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கம்.

முருகப் பெருமான் அனைத்து தெய்வங்களின் அம்சமாக திகழக் கூடியவர் என்பதாலேயே இந்த நாள் முருகப் பெருமானுக்குரிய நாளாக கருதப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் தைப்பூச விழா 10 நாட்கள் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் பால் குடம் எடுத்து வந்தும், காவடி ஏந்தி வந்தும், அலகு குத்தியும், பாத யாத்திரையாக வந்து முருகனை பக்தர்கள் வழிபடுவார்கள். 

தைப்பூசத்தன்று விரதமிருந்து, மனமுருகி முருகனிடம் என்ன பிரார்த்தனை வைத்தாலும் அது நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. தைப்பூசத்தில் விரதமிருந்து முருகனை வழிபட்டால் திருமண தடை விலகும், குழந்தைப்பேறு கிடைக்கும், பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள், வறுமை ஒழியும், வளமான வாழ்க்கை அமையும், பகை ஒழியும், நினைத்த காரியம் நிறைவேறும்.