ஜார்க்கண்ட்டில்.. காங்கிரஸுக்கு இருந்தது.. ஒன்னே ஒன்னு.. அந்த எம்.பியையும் தன் பக்கம் இழுத்தது பாஜக!

Manjula Devi
Feb 26, 2024,06:47 PM IST

ராஞ்சி:  ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஒரே எம்பியாக இருந்து வந்த கீதா கோடா திடீரென கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.


கடந்த 2006 ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தில் சுயேச்சை எம்எல்ஏ ஆக இருந்தவர் மதுகோடா. முதல்வராகவும் இருந்துள்ளார்.  இவரது மனைவிதான் கீதா கோடா. ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.பியாக இருந்து வந்தார் கீதா கோடா. சிங்பூம் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தவர் கீதா கோடா. 


லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொடர்ந்து  பல்வேறு கட்சித் தலைவர்களும் பாஜக வுக்கு இழுக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், கீதா கோடாவும் தற்போது பாஜகவில் வந்து இணைந்துள்ளார். 2019 லோக்சபா தேர்தலில் ஜார்க்கண்டில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் 12 இடங்களில் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் சார்பில் கீதா கோடா மட்டுமே வென்றிருந்தார். தற்போது அவரும் பாஜக பக்கம் போய் விட்டார்.




ஜார்க்கண்ட் மாநில மாநிலத் தலைவர் பாபுலால் மராண்டி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் கீதா கோடா. இதனால் ஜார்கண்ட் காங்கிரஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  லோக்சபா தேர்தலில் கூட்டணி குறித்து தான் அதிருப்தி அடைந்ததால் கட்சியை விட்டு விலகுவதாக கீதா கோடா தெரிவித்துள்ளார்.


சமீபத்தில்தான் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதல்வராக இருந்த சிபு சோரன் அமலாக்கத்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டார். இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்தார். சிபு சோரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். புதிய முதல்வர் பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் இருந்த ஒரே ஒரு காங்கிரஸ் எம்.பியையும் பாஜக தன் பக்கம் வளைத்து விட்டது குறிப்பிடத்தக்கது.