எம்.பி பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு உத்தரவு.. ஒரு மாதம் கெடு!

Su.tha Arivalagan
Mar 28, 2023,12:13 PM IST

டெல்லி: எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 2 நாட்களில் தற்போது  தனது அதிகாரப்பூர்வ வீட்டை ஒரே மாதத்தில் காலி செய்ய வேண்டும் என்று ராகுல் காந்திக்கு லோக்சபா வீட்டு வசதி வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லி துக்ளக் லேன் பகுதியில் ராகுல் காந்தியின் எம்.பி பங்களா உள்ளது. இந்த பங்களாவில் அவர் கடந்த 2005ம் ஆண்டு முதல் வசித்து வருகிறார். தற்போது அவரது பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் இந்த பங்களாவைக் காலி செய்ய லோக்சபா வீட்டு வசதி வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஒரு மாத கால அவகாசமும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.



இருப்பினும் இந்த நோட்டீஸ் தங்களுக்கு  இதுவரை வரவில்லை என்று ராகுல் காந்தியின் டீம் கூறியுள்ளது.  இதுகுறித்து காங்கிரஸ் எம்.பியும், தேசிய செய்தித் தொடர்பாளருமான டாக்டர் நசர் ஹூசேன் கூறுகையில், இது எதிர்பார்த்ததுதான். பாஜக வேட்டையாடும் வேலையில் இறங்கியுள்ளது. எதிர்ப்புக் குரல்களை முடக்க அனைத்து வகையான தந்திரங்களிலும் பாஜக ஈடுபடும். மிகவும் சின்னபுத்தியுடன், மிக முக்கியமான தலைவர் ஒருவரை நாடாளுமன்றத்திலிருந்து அவர்கள் வெளியேற்றியுள்ளனர். அப்படி இருக்கையில் இந்த நோட்டீஸ் எல்லாம் பெரிதில்லை என்றார்.

ஆனால்  ராகுல் காந்தி வீட்டைக் காலி செய்வதில் ஒரு சிக்கல் உள்ளது. அவருக்கு மத்திய அரசு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி வருகிறது. அப்படி இருக்கையில், அவருக்கு வீட்டு வசதியையும் அரசே செய்து தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தப் பிரச்சினையை அரசு எப்படி சமாளிக்கும் என்று தெரியவில்லை.

டாக்டர் நசர் ஹூசேன் மேலும் கூறுகையில், வீடுகளைக் காலி செய்ய எம்.பிக்களுக்கு அவகாசம் தர வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மாதிரியும், ஆளுங்கட்சி அல்லது ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர்களுக்கு ஒரு மாதிரியும் மத்திய அரசு நடந்து கொள்கிறது. ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர்களுக்கு வீட்டைக் காலி செய்ய பல மாத அவகாசம் தரப்படுகிறது என்றார் அவர்.

ஏப்ரல் 23ம் தேதிக்குள் துக்ளக் லேன் வீட்டைக் காலி செய்ய ராகுல் காந்திக்கு லோக்சபா வீட்டு வசதி வராியம் கெடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.