4 மாநிலங்கள்.. 6 பேர்.. குருகிராமில் ஒன்று கூடி.. நாடாளுமன்றத்தைக் குறி வைத்து.. அதிர வைத்த "சதி"!

Su.tha Arivalagan
Dec 13, 2023,09:36 PM IST

டெல்லி: நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் "கலர் பாம்" வீச்சில் ஈடுபட்டு நாட்டையே அதிர வைத்த கும்பலைச் சேர்ந்த 6 பேரும் பிடிபட்டு விட்டனர். நான்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடி ஏன்  இப்படி ஒரு காரியத்தைச் செய்தார்கள் என்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.


நாடாளுமன்றத்தின் கீழ் சபையான லோக்சபாவில் இன்று காலை புகுந்த மனோரஞ்சன் என்பவர், சாகர் சர்மா என்பவரும், "கலர் பாம்"களை வீசி பெரும் ரகளையில் ஈடுபட்டனர். மேலும் சபாநாயகர் இருக்கையை நோக்கியும் ஓடினர். அவர்களின் செயலால் லோக்சபாவே அதிர்ந்து போனது. இருவரும் உடனடியாக மடக்கிப் பிடிக்கப்பட்டனர். அவர்களிடம் வேறு எந்த ஆயுதமும் இல்லை.


இதேபோல நாடாளுமன்றத்திற்கு வெளியே நீலம் தேவி என்பவரும், அமோல் ஷிண்டே என்பவரும் இதே பாணியில் போராட்டம் நடத்திக் கைதானார்கள். இவர்களிடமும் வேறு எந்த ஆயுதமும் இல்லை. செல்போன் கூட கிடையாது.


நாட்டின் கவனத்தை ஈர்க்கும் திட்டம்




மிக மிக தெளிவாக திட்டமிட்டு இவர்கள் இதை அரங்கேற்றியுள்ளனர். ஆயுதங்களை மட்டும் இவர்கள் பயன்படுத்தவில்லை. மற்றபடி மிகத் தெளிவாகத் திட்டமிட்டு இந்த "தாக்குதலை" நடத்தியுள்ளனர். நாட்டின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்க்கும் திட்டத்துடன்தான் அவர்கள் வந்திருப்பதாக ஊகிக்க முடிகிறது. காரணம், வேறு எந்தவிதமான "பயங்கரவாத" செயல்களிலும் ஈடுபடும் நோக்கில் இவர்கள் வரவில்லை என்று தெரிகிறது.


மொத்தம் 4 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து இந்தத் திட்டத்தை அரங்கேற்றியுள்ளனர்.  கர்நாடகா மாநிலம் மைசூருவைச் சேர்ந்த மனோரஞ்சன் கவுடா, ஹரியானா மநிலம் ஹிஸ்ஸாரைச் சேர்ந்த நீலம் தேவி, மகாராஷ்டிர மாநிலம் லத்தூரைச் சேர்ந்த அமோல் ஷிண்டே,  உத்தரப் பிரதேச மாநிலம் குருகிராமைச் சேர்ந்த லலித் ஜா, விக்கி சர்மா, சாகர் சர்மா ஆகியோ்தான் குற்றவாளிகள். 


இதில் தென் மாநிலத்தைச் சேர்ந்த மனோரஞ்சன், எந்த அடிப்படையில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுடன் கை கோர்த்து இந்த காரியத்தில் ஈடுபட்டார் என்பது மர்மமாக உள்ளது. இவர்கள் மட்டும்தான் இந்தத் திட்டத்தில் இருந்தார்களா அல்லது வேறு யாரேனும் இடம் பெற்றுள்ளனரா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.


6 பேரில் 3 பேர் உ.பியைச் சேர்ந்தவர்கள்




6 பேரில் 3 பேர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், உ.பியில் இதுதொடர்பாக ஏதேனும் அமைப்பு ரகசியமாக செயல்பட்டு வருகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிரான வார்த்தைகளை  மட்டுமே பிரயோகித்துள்ளனர். குறிப்பாக சர்வாதிகாரம் என்ற வார்த்தையையும் பிரயோகித்துள்ளனர். எனவே மத்திய அரசுக்கு எதிராக உ.பியில் வைத்து ரகசியத் திட்டம் ஏதேனும் திட்டமிடப்பட்டு வருகிறதா என்ற கோணத்திலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.


வேறு ஏதாவது "பெரிய" திட்டத்துக்கு முன்னோட்டமாக இந்த "கலர் பாம்" திட்டத்தை செயல்படுத்திப் பார்த்தார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 


இந்த ஆறு பேரும் கடந்த நான்கு வருடமாக பழகி வந்துள்ளனர். இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் உத்திகளையும் இவர்களே வகுத்துள்ளதாகவும் தெரிகிறது.  ஆறு பேரும் சேர்ந்துதான் நாடாளுமன்றத்துக்குள் நுழைய திட்டமிட்டுள்ளனர். ஆனால்  2 பேருக்கு மட்டுமே பாஸ் கிடைத்துள்ளது. எனவேதான் சாகர் சர்மாவும், மனோரஞ்சனும் மட்டும் லோக்சபாவுக்குள் நுழைந்துள்ளனர். 


விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியை நீலம்




இதுவரை நடந்த விசாரணையில் இந்த ஆறு பேருக்கும், வேறு எந்த தீவிரவாத அமைப்புடனும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்று தெரிய வந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது. 


ஆறு பேரில் நீலம் தேவிக்கு 42 வயதாகிறது. அவர் ஒரு ஆசிரியை. சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக தயாராகி வந்துள்ளார். இவருக்கு எந்த அரசியல் கட்சி, அமைப்புடனும் தொடர்பு இல்லை என்று அவரது சகோதரர் கூறியுள்ளார்.  இருப்பினும் கடந்த 2020ம் ஆண்டு நடந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த பிரமாண்ட விவசாயிகள் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றுள்ளார் நீலம் தேவி.