மக்களவை தேர்தல் starts... பலத்த பாதுகாப்புடன்.. ஈரோட்டில் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது!

Meenakshi
Apr 04, 2024,01:09 PM IST

ஈரோடு:  2024ம் ஆண்டிற்கான மக்களவை தேர்தலில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று முதல் தொடங்கியது.


2024ம் ஆண்டிற்கான மக்களவை தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி ஜூன் 4ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 


இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். ஏப்ரல் மாத வெயில் மட்டும் அல்ல,  தேர்தல் களமும் அனல் பறக்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், வேட்பாளர்கள் என அனைத்து தரப்பினர்களும்  அடிக்கும் வெயிலை சிறிதும் பொருட்படுத்தாது தீவிரமாக சுற்றி வாக்கு சேகரித்து வருகின்றனர்.




இந்நிலையில், வாக்குச்சாவடிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள 85+ வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், கண்பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக தபால் வாக்கு செலுத்தும் வசதியை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கி, ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. 


அதன்படி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த வாக்குகள் சேகரிக்கப்படும். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வீடு வீடாக சென்று தபால் வாக்குகளை சேகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.  இதில் வாக்களிக்க முடியாதவர்கள் ஏப்ரல் 8ம் தேதி மீண்டும் ஒரு முறை வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஈரோட்டில் மட்டும் 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோர்கள் 21,805 பேரும், 9,824 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர். இதில், 2,201 முதியவர்களும், 800 மாற்றுத்திறனாளிகளும் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். விருப்பம் தெரிவித்த 3,001 பேரிடம் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.