வேட்பு மனு தாக்கல் முடிய.. இன்னும் 10 நாள்.. தத்தளிக்கும் அதிமுக.. என்ன செய்ய போகிறது?

Aadmika
Mar 17, 2024,06:15 PM IST

சென்னை : லோக்சபா தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்து விட்டது. ஆனாலும் அதிமுக கூட்டணி இன்னும் இறுதியாகாமல் இருப்பது அக்கட்சியினரை விரக்திக்குள்ளாக்கியுள்ளது. தேமுதிகவிடம் இவ்வளவு கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டுமா என்று அவர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால், தேசிய அளவில் அனைத்து அரசியல் கட்சிகளும் இன்னும் கூடுதல் பரபரப்பாகி விட்டன. தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடத்தப்பட உள்ளதாக அறிவித்து விட்டார்கள். இப்போது பிரதான எதிர்க்கட்சியான அதிமுக என்ன செய்ய போகிறது என்பது தான் தமிழக மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.


கையில் 10 நாள்தான்: தமிழகத்தில் தேர்தல் நடப்பது என்னவோ ஏப்ரல் 19 தான். ஆனால் வேட்புமனு தாக்கல் மார்ச் 20ம் தேதியே துவங்கி விடுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 27ம் தேதி தான் கடைசி நாளாக தேர்தல் கமிஷன் சொல்லி உள்ளது. இதனால் இறுதி முடிவு எடுத்து, களத்தில் இறங்குவதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கைகளில் இருப்பது வெறும் 10 நாட்கள் மட்டும் தான்.


ஆளும் கட்சியான திமுக, இந்தியா கூட்டணியில் சேர்ந்து காங்கிரசுடன் கூட்டணி அமைத்து, தமிழகத்தில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை இணைத்துக் கொண்டு தொகுதி பங்கீடு குறித்து பேசி முடித்து விட்டது. காங்கிரஸுக்கு மட்டும் தொகுதிகளை ஒதுக்க வேண்டியுள்ளது. தனது வேட்பாளர்களையும் அது ஒரு பக்கம் முடிவு செய்ய ஆரம்பித்து விட்டது.




சுணங்கிப் போன அதிமுக: ஆனால் ஆரம்பத்தில் படுவேகமாக இருந்த அதிமுக, இப்போது சத்தமே இல்லாமல் இருக்கிறது. சத்தம் இல்லாமல் மெளனமாக இருந்த பாஜக, தற்போது அதிமுக பக்கம் இருந்த பாமக உள்ளிட்ட பல கட்சிகளை தங்கள் பக்கம் இழுத்து வருகிறது. திமுக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் கூட பாஜக கூட்டணியில் சேர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றாக உள்ள அதிமுக இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது தான் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 


அதிமுக, தற்போது தேமுதிக.,வை மட்டும் தான் நம்பி உள்ளது. அந்த கட்சியுடன் மட்டும் தான் அதிமுக தொடர்ந்து பேசி வருகிறது. அதிமுக.,விடம் மற்ற கட்சிகள் கூட்டணியின் சேர்த்துக் கொள்ள பேசி வந்த காலம் போய், இப்போது யாருடன் கூட்டணி பேசுவது என தெரியாமல் தேமுதிக.,வுடன் மூன்றாவது கட்டமாக பேசிக் கொண்டிருக்கிற நிலையில் இருக்கிறது அதிமுக. 




தேமுதிகவிடம் ஏன் இவ்வளவு கெஞ்சல்?: இந்த பேச்சுவார்த்தையும் முடிவுக்கு வரவில்லை என்றால் தனித்து போட்டியிடுவது தான் அதிமுக.,விற்கு இருக்கும் ஒரே ஆப்ஷன்.  ஆனால் தேமுதிகவிடம் கட்சி மேலிடம் இந்த அளவுக்கு இறங்கிப் போவது தேவையில்லாதது, வராட்டி விடுங்க. தனிச்சுப் போட்டியிடுவோம் என்று அதிமுக தொண்டரகள் கோபமாக கூறுகிறார்களாம்.


கூட்டணி பிரச்சனை ஒரு புறம் என்றால், மற்றொரு பக்கம் இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கு ஒதுக்க வேண்டும் இல்லையென்றால் சின்னத்தை முடக்க வேண்டும் என தேர்தல் கமிஷனிடம் ஓபிஎஸ் டீம் கொடுத்துள்ள கடிதம் ஒரு பக்கம் அதிமுக.,விற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இது தவிர அதிமுக பொதுச் செயலாளர் உருவாக்கப்பட்டது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து வழக்கு ஒரு புறம் நடந்து கொண்டிருக்கிறது. 


சுற்றிலும் நெருக்கடி:  இத்தனை நெருக்கடிகளையும் சமாளித்து, கூட்டணி, தொகுதி பங்கீடு ஆகியவற்றை முடிவு செய்து, வேட்பாளர்களை அறிவித்து, வேட்புமனுவும் தாக்கல் செய்ய வேண்டும். இதற்கு அதிமுக.,விற்கு இருப்பது வெறும் 10 நாட்கள் மட்டும் தான் என்பதால், கட்சி தலைமை என்ன செய்ய போகிறது என்ற பதற்றம் தொண்டர்களிடம் அதிகமாகவே காணப்படுகிறது.