திருச்சி போச்சு.. திருநாவுக்கரசருக்கு சீட் கொடுக்குமா காங்கிரஸ் ?..  இந்த முறை எங்கு போட்டியிடுவார்

Aadmika
Mar 19, 2024,05:31 PM IST

சென்னை : திருச்சி தொகுதி காங்கிஸ் எம்.பி.,யாக இருக்கும் திருநாவுக்கரசருக்கு இந்த முறை திருச்சியில் போட்டியிட வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. இந்த முறை திருச்சி தொகுதியை மதிமுக.,விற்கு ஒதுக்குவதாக அறிவித்து விட்டது திமுக தலைமை. 


இதனால் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவராக இருக்கும் திருநாவுக்கரசருக்கு இந்த முறை காங்கிரஸ் எந்த தொகுதியில் சீட் ஒதுக்க போகிறது என்பது தெரியவில்லை.




திருநாவுக்கரசர் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி. 1987 ல் எம்ஜிஆர் முதல்வராக இருந்த போதே பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்தவர். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா பக்கம் நின்றார். பின்னர் அவரிடமிருந்து விலகி, தனிக் கட்சி தொடங்கினார். அதன் பிறகு பாஜக.,வில் இணைந்து மத்தியில் தகவல் தொடர்பு இணை அமைச்சராக பதவி வகித்தார். 


பாஜகவில் இணைந்தபோது, அவர் ராஜ்யசபா எம்.பி.யாக ஒரு முறை இருந்துள்ளார். பிறகு அங்கிருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இருந்து தேசிய செயலாளராக இருந்து, பிறகு தமிழக காங்கிரஸ் தலைவராகவும் இருந்தவர். 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 


நெல்லையில் போட்டியிடுவாரா திருநாவுக்கரசர்?




ஆனால் இந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொகுதி, மதிமுக.,விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் திருநாவுக்கரசர் இந்த முறை திருச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பில்லாமல் போய் விட்டது. அவருக்கு காங்கிரஸ் எந்த தொகுதியை ஒதுக்க போகிறது என தெரியவில்லை.  திருநெல்வேலி தொகுதியில் அவரை நிறுத்தக் கூடும். அவர் சார்ந்த முக்குலத்தோர் வாக்குகள் அங்கு கணிசமாக உள்ளன. அதை கணக்கில் வைத்து அங்கு அவரை நிறுத்த காங்கிரஸ் முயலலாம்.


அதேபோல காவிரி டெல்டாவில் வரும் மயிலாடுதுறை தொகுதியிலும் திருநாவுக்கரசரை நிறுத்த காங்கிரஸ் திட்டமிடலாம். ஆனால் இதற்கெல்லாம் திருநாவுக்கரசர் ஒத்து வருவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

ஒருவேளை சீட் தராமல் காங்கிரஸ் மறுத்து விட்டால், காங்கிரசில் இருந்து மீண்டும் பாஜகவுக்கோ அல்லது அதிமுகவுக்கோ செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி சென்றால் எந்த கட்சிக்கு செல்வார் என்ற பேச்சுக்களும் அடிபட்டு வருகிறது.


இதுகுறித்து முன்பு செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, இப்படி சொல்பவனை செருப்பால் அடிப்பேன் என்று அவர் ஆவேசம் காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது சீட் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே திருநாவுக்கரசர் அதே ஆவேசத்தோடு இருப்பாரா.. அல்லது ஏதாவது அதிரடி முடிவெடுப்பாரா என்பது எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.


ஏற்கனவே பாஜக.,வில் இருந்து எம்.பி.,யாகி, மத்திய அமைச்சர் பதவியும் வகித்ததால் மீண்டும் பாஜக.,விற்கு செல்லலாம். ஒருவேளை பாஜக.,விற்கு சென்று, அங்கு முக்கிய தொகுதியில் போட்டியிட சீட் பெற்றால் மீண்டும் வெற்றி பெற்று எம்.பி.,யாகவும், முக்கிய பொறுப்பை பெற வாய்ப்புள்ளது. பல கட்சிகளை சேர்ந்தவர்கள் குறிப்பாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலர் பாஜக.,வில் இணைந்து வருவதால் திருநாவுக்கரசரும் பாஜக பக்கம் செல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது.


ஆனால் திருநாவுக்கரசரை அவ்வளவு சீக்கிரம் காங்கிரஸ் கைவிட்டு விடாது.. மாறாக ராஜ்யசபா சீட் கொடுத்து அவரை சமாதானப்படுத்தி விடும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸார் உள்ளனர்.