திருச்சூரில் சுரேஷ் கோபிக்கு மீண்டும் சீட்.. கட்சிக்குள் முனுமுனுப்பு.. பாஜக.வின் கணக்கு என்ன?

Aadmika
Mar 03, 2024,05:42 PM IST

திருவனந்தபுரம் : வரும் லோக்சபா தேர்தலில் கேரளாவின் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு நடிகரும், அரசியல் பிரமுகருமான சுரேஷ் கோபிக்கு பாஜக சார்பில் மீண்டும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இது கேரள பாஜகவில் சற்று சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


2024 லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் பாஜக சார்பில் போட்டியிடும் 195 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில் கேரள மாநிலத்தில் நடப்பு அமைச்சர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.  இவர்களில் நடிகர் சுரேஷ் கோபி, மத்திய இணையமைச்சர்களான வி.முரளீதரன் மற்றும் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோரும் அடங்குவர். 


திருச்சூர் தொகுதி வேட்பாளராக நடிகர் சுரேஷ் கோபியும், அட்டிங்கல் தொகுதி வேட்பாளராக முரளீதரனும், திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளராக ராஜீவ் சந்திரசேகரும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முரளீதரனும், ராஜீவ் சந்திரசேகரும் ராஜ்யசபா எம்.பிக்கள் ஆவர்.


கேரளாவில் ஏற்கனவே கம்யூனிஸ்ட்கள் அதிக பலத்துடன் உள்ளனர். அம்மாநில கவர்னருக்கும் மாநில அரசிற்கும் மோதல் நிலவுகிறது. இப்படி பல அரசியல் நெருக்கடிகள் இருக்கும் நிலையில் 12 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு வந்து சேர்ந்த, காங்கிரஸ் மூத்த தலைவரான ஏ.கே.ஆன்டனியின் மகன் அனில் ஆன்டனிக்கு பத்தினம்திட்டா தொகுதியில் போட்டியிட பாஜக சார்பில் சீட் வழங்கப்பட்டுள்ளது.




2016ல் நியமன எம்பி.,யாக ராஜ்யசபாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பி., ஆனவர் சுரேஷ் கோபி. பிறகு 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட சுரேஷ் கோபிக்கு சீட் வழங்கப்பட்டது. ஆனால் அந்த தேர்தலில் மூன்றாவது இடத்தை தான் சுரேஷ் கோபியால் பெற முடிந்தது. திருச்சூர் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது. இதற்கு அடுத்தபடியாக அதிக ஓட்டுக்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் பெற்றது.


இருந்தாலும் சுரேஷ் கோபிக்கு திருச்சூர் தொகுதியில் இருக்கும் செல்வாக்கு, ஸ்டார் அந்தஸ்து ஆகியவற்றின் காரணமாக இந்தமுறை எப்படியும் அவர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் மீண்டும் சீட் கொடுத்துள்ளது. சமீபத்தில் குருவாயூரில் நடைபெற்ற சுரேஷ் கோபியின் மகள் திருமணத்திற்கு  பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்து வந்திருந்து, மணமக்களை வாழ்த்தினார். அந்த சமயத்திலேயே சுரேஷ் கோபி, பிரதமரிடம் அதிக நெருக்கம் காட்டியதாக சொல்லப்பட்டது. பிரதமரை மகள் திருமணத்திற்கு வரவழைத்து, அதன் மூலம் தனது செல்வாக்கை அவர் காட்டியதால், அவர் மீது நம்பிக்கை வைத்து கட்சி தலைமை சீட் கொடுத்துள்ளது. அதே போல் பார்லிமென்ட் வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருக்கும் முரளிதரனும் 2018ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து ராஜ்ய சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். 


ஆனால் கேரளாவில் தற்போதுள்ள நெருக்கடியான அரசியல் சூழலில், ஏற்கனவே திரிச்சூர் தொகுதியில் 3வது இடத்தை பிடித்து, தோல்வி அடைந்த சுரேஷ் கோபிக்கு எதற்காக கட்சி தலைமை மீண்டும் சீட் கொடுத்துள்ளது. அதோடு இதுவரை தேர்தலை சந்திக்காமல் மத்திய இணையமைச்சர்களாக இருப்பவர்களுக்கு லோக்சபாவில் போட்டியிட எதற்காக சீட் கொடுக்க வேண்டும் என பலரும் குமுறிக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.