பிரேமலதா கையில் அதிகாரம்.. "தாமரையா அல்லது இலையா"?.. தேமுதிகவிற்கு  4 வாய்ப்புகள்!

Aadmika
Feb 07, 2024,06:23 PM IST

சென்னை : லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்ற முடிவை எடுக்கு அதிகாரத்தை கட்சியின் பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்த்திற்கு வழங்கியுள்ளனர் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள். சென்னையில் நடைபெற்ற தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


அதிகாரம் வழங்கியாச்சு சரி, இப்போது பொதுச் செயலாளராக பிரேமலதா என்ன முடிவு எடுக்க போகிறார் என்பது தான் அனைவரின் மனதிலும் இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி. தேமுதிக கட்சியின் தலைவரும், நிறுவனருமான விஜயகாந்த் இல்லாத நிலையில் கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு பிரேமலதா விஜயகாந்த்தும், தேமுதிக.,வும் எதிர்கொள்ள போகும் முதல் தேர்தல் இது. 


தேமுதிகவின் எதிர்காலம் பிரேமலதா கையில்




விஜயகாந்த்தின் மறைவால் என்ன செய்வது என தெரியாமல் தொண்டர்கள் குழப்பத்தில் இருக்கும் நிலையில், இந்த தேர்தலில் பிரேமலதா எடுக்கப் போகும் முடிவில் தான் தேமுதிக கட்சியின் எதிர்காலமே உள்ளது என்று சொன்னால் அது பொய்யாகாது.  இதுவரை கட்சியில், கூட்டணி பேச்சுவார்த்தையில் பிரேமலதாவின் தலையீடு அதிகமாக இருந்தது என ஒவ்வொரு முறையும் கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்கும் போதெல்லாம் ஒரு குற்றச்சாட்டு பரவுவது உண்டு. 


இந்த முறை அப்படி ஒரு குற்றச்சாட்டு எழுவதற்கு வாய்ப்பே கிடையாது. காரணம், அதிகாரப்பூர்வமாகவே, இந்த முறை பொதுச் செயலாளராக நேரடியாக அவரே முடிவு எடுக்க போகிறார். என்ன செய்ய போகிறார்? யாருடன் கூட்டணி அமைக்க போகிறார்? அவர் என்ன முடிவு எடுத்தால் தேமுதிக கட்சியின் எதிர்காலம் பிரகாசமாகும்? இப்படி பல கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.




தமிழகத்தில் இன்றைய அரசியல் கள நிலவரப்படி தேமுதிக பொதுச் செயலாளரான பிரேமலதாவிற்கு நான்கு வாய்ப்புக்கள் உள்ளன. இதில் எதை பிரேமலதா தேர்வு செய்தால் சரியாக இருக்கும் என்று சற்று ஆராய்ந்து பார்க்கலாம்.


தேமுதிக முன் இருக்கும் வாய்ப்புகள் :


1. தேமுதிக தற்போது எதிர்க்கட்சியான அதிமுக.,வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. கட்சி துவங்கி, மக்கள் செல்வாக்குடன் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ., ஆனாலும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக.,வுடன் கூட்டணி அமைத்த பிறகு தான், எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை விஜயகாந்த்தால் பிடிக்க முடிந்தது. அதே சமயம் அதிமுக., உடன் கூட்டணி வைத்த பிறகு விஜயகாந்த்தால் தனித்து செயல்பட முடியாமல் போனதால் தேமுதிக.,வாலும் பெரிய அளவில் வளர்ச்சியை பெற முடியவில்லை. ஆனால் இன்று ஜெயலலிதாவோ, விஜயகாந்த்தோ இல்லாத சூழ்நிலையில் அதிமுக கட்சியே இரண்டாக பிளவுபட்டு கிடக்கிறது. அந்த கட்சிக்குள்ளேயே சரி, தொண்டர்கள் இடையேயும் சரி இன்னும் தெளிவான நிலைப்பாடு இல்லாமல் குழப்பான சூழலே இருந்து வருகிறது. அதேசமயம், அதிமுக பக்கம் போகலாம் என்பதே தொண்டர்கள் பலருக்கும் உள்ள ஒரு எண்ணமாகும். இந்த சூழலில் தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி வைத்தால், அது லோக்சபா தேர்தலில் தேமுதிக.,விற்கு பலமாக இருந்தாலும், கட்சியின் எதிர்காலத்தை யோசித்தால் கொஞ்சம் சிரமம் தான்.




2. ஆளும் கட்சியான திமுக., வுடன் தேமுதிக கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று முழுமையாக நிராகரித்து விட முடியாது. கருணாநிதி இருந்த வரையில் விஜயகாந்த்தை பல முறை கூட்டணிக்கு அழைத்தார். ஆனால் தன்னுடைய கல்யாண மண்டபத்தை இடித்த கோபம் இருந்ததால் விஜயகாந்த், கருணாநிதி மீது அதிக அளவில் மதிப்பும், மரியாதையும் இருந்தாலும் கடைசி வரை திமுக.,வுடன் கூட்டணி வைக்கவேயில்லை. ஆனால் இன்றைய நிலைமை வேறு. விஜயகாந்த் இறந்த சமயத்தில் அவரது இறுதி சடங்குகள் நிகழ்வதற்கு பல உதவிகள் திமுக அரசால் செய்யப்பட்டதுடன், முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது. விஜயகாந்த் மறைவின் போது தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டுமின்றி அவரது குடும்பத்தினர்கள் பலரும் நேரில் வந்து பிரேமலதாவிற்கு ஆறுதல் கூறினர், ஆதரவாக நின்றனர். இதன் அடிப்படையில் தற்போது திமுக - தேமுதிக இடையே இனம் புரியாத பாசப் பிணைப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு கூட்டணிக்கு வழி வகுக்கும் என்பது தெரியவில்லை.


3. மத்தியில் ஆளும் பாஜக., கூட்டணியில் தேமுதிக ஏற்கனவே இருந்துள்ளது. தேசிய அளவிலும் சரி, தமிழகத்திலும் சரி அதிக பலத்துடன் இருக்கும் பாஜக., கூட்டணிக்கு தேமுதிக திரும்புவது கட்சியின் எதிர்காலத்திற்கும், 2026ல் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலிலும் தேமுதிக மீண்டும் வளர்ச்சி பெற துணையாக இருக்கலாம். அதோடு பிரதமர் நரேந்திர மோடி, விஜயகாந்த்தை வெகவாகப் புகழ்ந்து அறிக்கை விட்டிருந்தார். மறைந்த விஜயகாந்த்திற்கு பத்மபூஷண் விருது வழங்கியும் உள்ளனர். பாஜகவைப் பொறுத்தவரை தேமுதிகவை அது நிராகரிக்கவில்லை. தேமுதிக என்ன முடிவெடுக்கும் என்றுதான் தெரியவில்லை. தமிழகத்தில் அழுத்தமாக காலூன்ற முயற்சி செய்து வரும் பாஜக.,வுடன் கூட்டணி வைப்பதும் தேமுதிக.,விற்கு பலமாக அமையலாம்.




4. பலமான கட்சிகளுடன் சேர்ந்து கட்சியின் பலத்தை அதிகரித்து, தொண்டர்களுக்கு நம்பிக்கை தருவது ஒரு வாய்ப்பு என்றால், தனித்து போட்டியிட்டு கட்சியின் பலத்தை காட்டவும், கட்சிக்குப் புத்துயிர் கொடுக்கவும் முயற்சி செய்யலாம். ஆரம்பத்தில் விஜயகாந்த் தனித்து போட்டியிட்டுதான், தன்னுடைய செல்வாக்கை காட்டி தான், தமிழக அரசியலில் அதிமுக-திமுக.,விற்கு மாற்றாக மூன்றாவது பெரிய கட்சியாக தேமுதிக.,வை நிலைநிறுத்தினார். இதே பாணியை பிரேமலதாவும் பின்பற்றலாம். ஆனால் தொண்டர்கள் தற்போது இருக்கும் நிலையிலும், விஜயகாந்த் இல்லாத நிலையிலும் தனித்து போட்டியிடுவது தேமுதிக.,விற்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். தனித்துப் போட்டி என்பது இரு பக்கமும் கூராக உள்ள கத்தி போன்றது.. கட்சியின் ஓட்டு வங்கியை பெருக்கவும் அது உதவலாம்.. அதேசமயம், எதிர்காலத்தை அதளபாதாளத்திற்கு தள்ளவும் செய்யலாம்.


பார்க்கலாம்.. பிரேமலதா என்ன செய்யப் போகிறார் என்பதை.