பிரதமருக்கு சாம்பார் ரொம்பப் பிடிச்சிருக்கு போல.. அதான் அடிக்கடி வர்றார்.. ஈவிகேஎஸ் இளங்கோவன்

Su.tha Arivalagan
Mar 03, 2024,05:43 PM IST

ஈரோடு: பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாட்டு சாம்பார் ரொம்பப் பிடிச்சுப் போச்சு போல. அதுதான் அடிக்கடி வருகிறார். அவர் எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் ஜெயிக்க முடியாது. இந்தத் தேர்தலோடு அவரும் காணாமல் போய் விடுவார் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு விரைவில் முடிவடையும் சூழல் உருவாகியுள்ளது. விரும்பிய தொகுதிக்காக காங்கிரஸ் விடாமல் போராடுவதாலும், அதைக் கொடுப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாலும், திமுக தயங்குகிறது. இதன் காரணமாக உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் நிலவுவதாக தெரிகிறது. அதேசமயம், கூட்டணி இறுதியானது என்பதை ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை உறுதிபடக் கூறியுள்ளார்.




இந்த நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் அடிக்கடி தமிழ்நாடு வருவதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை. அவருக்கு நம்ம ஊர் சாம்பார் பிடிச்சு போச்சு போல. அதான் அடிக்கடி வருகிறார். எத்தனை முறை வந்தாலும் மக்களை வெல்ல முடியாது. இந்தத் தேர்தலோடு அவரே காணாமல் போய் விடுவார்.


விஜயதரணி வெளியேறியதெல்லாம் நல்லதுதான். கெட்ட சக்தி காங்கிரஸை விட்டு வெளியேறியுள்ளது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இது கட்சியை தூய்மைப்படுத்தும். இது போல வெளியேறுகிறவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.


பாஜக வேட்பாளர்கள் பட்டியல் குறித்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஜெயிக்காதவர்களைத் தேர்ந்தெடுத்து, ஜெயிக்க முடியாத தொகுதிகளுக்கு வேட்பாளர்களாக்கி அதை அறிவித்துள்ளனர். எங்குமே அவர்களால் ஜெயிக்க முடியாது. தமிழ்நாட்டில் ஜெயிக்க முடியும், செல்வாக்கு இருக்கிறது என்றால் மத்திய நிதியை அள்ளிக் கொடுத்திருப்பார்களே.. ஆனால் கொடுக்கவில்லையே என்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.