லோக்சபா தேர்தல்.. ஆளுக்கு எத்தனை தொகுதி..  திமுக -காங்கிரஸ் இடையே.. ஜனவரி 28ல் ஆலோசனை!

Manjula Devi
Jan 24, 2024,06:09 PM IST

சென்னை: லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக, திமுக-காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தை வரும் ஜனவரி 28ஆம் தேதி நடக்கவுள்ளது. டி.ஆர் பாலு தலைமையில், திமுக - காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயம் அரங்கில் நடைபெற உள்ளது.


தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வலுவான கூட்டணியாக இருந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு தேர்தலிலும் ஒன்றாக கூட்டணியா இணைந்து செயல்பட்டு வருகிறது.  2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கின்றது. இதன் காரணமாக பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாகி வருகின்றன. 


ஒவ்வொரு கட்சியும் தேர்தல் குழு ,தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி தொடர்பான குழுக்களை அமைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.  இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவும், காங்கிரஸ் குழுவும் இணைந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட உள்ளனர்.




இந்த பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் ஜனவரி 28ஆம் தேதி மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் டி ஆர் பாலு தலைமையில் திமுக குழு பங்கேற்கிறது. இதில் 5 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். அதேபோல காங்கிரஸ் குழுவும் இதில் பங்கேற்கிறது.


இதில் இரு கட்சிகளும் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்ற பூர்வாங்க பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.  இது முதல் கட்ட பேச்சுவார்த்தைதான். தொடர்ந்து மேலும் சில முறை கூடி பேசி இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.