Loksabha Elections 2024: ஜோதிமணிக்கு மீண்டும் சீட் உண்டா.. கரூரில் சிக்கல்.. திமுகவினர் போர்க்கொடி!

Meenakshi
Feb 05, 2024,08:49 PM IST

கரூர்:  கரூர் தொகுதியில் திமுகவே போட்டியிட வேண்டும். காங்கிரஸ்சிற்கு சீட் தரக் கூடாது என்று திமுகவினார் கோரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


லோக்சபா தேர்தலை சந்திக்க திமுக தயாராகி வருகிறது. பல்வேறு குழுக்களை அமைத்து பணிகளை முடுக்கி விட்டுள்ள தி்முக தற்போது தொகுதி வாரியாக, மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் திமுக மேலிடம் ஆலோசனை நடத்தி வருகின்றது. 


அந்த வகையில் வருகின்ற கரூர் நிர்வாகிகளை அழைத்து  திமுக மேலிடம் ஆலோசனை நடத்தியுள்ளது. அந்த கூட்டத்தில் பெரும்பாலான  கட்சி நிர்வாகிகள் இந்த தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக தான் போட்டியிட வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு சீட் வழங்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.




கடந்த 2019 ம்  ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில்  காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். திமுகவினர்  ஜோதிமணியின் வெற்றிக்கு பாடுபட்டனர். குறிப்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி ஜோதிமணிக்காக களப் பணியாற்றி, தீவிரப் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். இதனால், அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட தம்பித்துரையை 4.29 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோதிமணி வென்றார்.


அதே போல அரவக்குறிச்சி சட்டசபை இடைத்தேர்தலில் ஜோதிமணியும் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக தீவிரமாக வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது தனது சகோதரி ஜோதிமணிக்கு ஓட்டு போட வேண்டும் என்று செந்தில் பாலாஜியும்,  அதேபோல, ஜோதிமணியும் அண்ணன் செந்தில் பாலாஜிக்கு ஓட்டு போட வேண்டும் என்று இருவரும் பாச மழை பொழிந்து பிரச்சாரம் செய்தனர். பிரச்சாரத்தின் பலனாக செந்தில் பாலாஜியும் வெற்றி பெற்றார். அதன் பிறகு இருவரும் கட்சி நிகழ்ச்சிகளிலும், அரசு விழாக்களிலும் சேர்ந்தே கலந்து கொண்டனர். 


அதன் பிறகு, இவர்கள் இருவரிடையே ஏற்பட்ட பிரச்சனையினால் இருவரும் சேர்ந்து எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. இப்போது செந்தில் பாலாஜி சிறைக்குப் போய் விட்ட நிலையில் கரூர் திமுகவில் ஒரு விதமான இறுக்கமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே, திமுக - காங்கிரஸ் இடையே நீரு பூத்த நெருப்பு போல பூசலும் இருந்து வருகிறது. இந்தப் பிரச்சினை தொடர்பாக இதுவரை திமுக எந்த ரியாக்ஷனும் காட்டியதில்லை. 


இந்நிலையில்தான், வருகின்ற லோக்சபா தேர்தலில் திமுக தான் போட்டியிட வேண்டும். காங்கிரஸ்சிற்கு இடம் அளிக்கக்கூடாது என்று திமுக நிர்வாகிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.இப்போது  திமுக என்ன செய்ய போகிறது. காங்கிரசிடம் மீண்டும் சீட்டைக் கொடுக்குமா? அல்லது திமுகவே போட்டியிடுமா?  அல்லது சீட் தருகிறோம்.. ஆனால் ஜோதிமணி போட்டியிடக் கூடாது என்று கேட்டுக் கொள்ளுமா என்று பல்வேறு கேள்விகள் எழுநு்துள்ன.


தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றியை அலேக்காக அள்ள வேண்டு என்று திமுக கவனமாக உள்ளதால்,  கரூர் விவகாரத்தையும் அது சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது. உள்ளூர்ச்  சண்டையில் தொகுதியை இழந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதால், திமுகவினரின் கோரிக்கை குறித்து மேலிடம் தீவிரமாக பரிசீலித்து வருவதாக சொல்லப்படுகிறது.