தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தி.. அதிமுகவை கழற்றி விடுகிறதா தேமுதிக.. பாஜகவுடன் பேச முடிவா?

Meenakshi
Mar 11, 2024,11:03 AM IST

சென்னை:  நாடாளுமன்ற தேர்தலில் தாங்கள் கேட்கும் ராஜ்யசபா சீட்டை தர அதிமுக மறுத்து வருவதால் அதிருப்தி அடைந்துள்ள தேமுதிக, பாஜகவுடன் அணி சேர முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 


அதிமுகவை கழற்றி விட்டு,பாஜகவுடன் இன்று கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் பல்வேறு முக்கிய கட்சிகள் கூட்டணிகளை இறுதி செய்து, தொகுதிப் பங்கீட்டையும் முடிவு செய்து, வேட்பாளர்களையும் அறிவிக்க ஆரம்பித்துள்ளன. கடந்த ஒரு மாதமாகவே நாடாளுமன்றம் தேர்தல் கூட்டணி தொடர்பாக அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. 




தமிழ்நாட்டில் திமுக கூட்டணி தனது கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கையை முடித்து விட்டது. சில கட்சிகளுக்கு தொகுதிகளையும் ஒதுக்கி விட்டது. பிற கட்சிகளுக்கும் தொகுதிகளை முடிவு செய்யவுள்ளது. தனது கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான நேர்காணலையும் முடித்து விட்டது.


தமிழகத்தின் மற்றொரு முக்கிய கட்சியான அதிமுகவிலோ தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. அதேபோல பாஜகவிலும் இழுபறியே நிலவுகிறது. அதிமுக கூட்டணியில் இதுவரை புதிய தமிழகம், அகில இந்திய பார்வர்ட் பிளாக் ஆகியவை இணைந்துள்ளன. தேமுதிக மற்றும் பாமகவுடன் பேச்சு நடந்து வந்தது. இதில் தேமுதிகவுடன் நேரடியாகவே 2 முறை பேச்சு நடந்து முடிந்து விட்டது. பாமகவுடன் ரகசியப் பேச்சுவார்த்தையே நடந்துள்ளது. அதிகாரப்பூர்வமாக எதுவும் இதுவரை பேசப்படவில்லை.


தேமுதிக தரப்பில் முதலில் 14 லோக்சபா தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி கேட்கப்பட்டது. ஆனால் அதிமுகவோ 4 லோக்சபா தொகுதிகள் தருகிறோம், ராஜ்யசபா சீட்டுக்கு வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டது. பிரேமலதா விஜயகாந்த் தனது நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வரவில்லை.  மேலும்,  கிருஷ்ணகிரி, விருதுநகர், திருச்சி, கடலூர் ஆகிய தொகுதிகளை ஒதுக்க தேமுதிக வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கடந்த முறை ஒதுக்கிய வட சென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய தொகுதிகளையே மீண்டும் ஒதுக்க அதிமுக முன்வந்ததாக சொல்லப்பட்டது.


அதை தொடர்ந்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், தேமுதிக அவைத்தலைவர் பி இ இளங்கோவன், அழகாபுரம் ஆர் மோகன்ராஜ், பா. பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இதில் தொகுதிகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.  இதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.


இந்த நிலையில் தற்போது பாஜகவுடன் பேச தேமுதிக தரப்பு திட்டமிட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.  இதனால் அதிமுக தரப்பு அதிர்ச்சியும், அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ளதாக தெரிகிறது. பாஜகவிலும் தேமுதிகவின் கோரிக்கை நிறைவேறாமல் போனால் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. பாஜகவைப் பொறுத்தவரை தமிழகத்திலிருந்து ஒரு ராஜ்யசபா எம்.பியைக் கூட அக்கட்சியால் தேர்ந்தெடுக்க முடியாது. எனவே தேமுதிகவுக்கு அது நிச்சயம் ராஜ்யசபா சீட் தர வாய்ப்பில்லை. அப்படியே உத்தரவாதம் கொடுத்தாலும் கூட வெளி மாநிலத்திலிருந்து மட்டுமே தர முடியும்  என்பதால் அதிலும் சிக்கல் நிலவுகிறது.