அதிமுக -தேமுதிக இடையே 3ம் கட்ட பேச்சு வார்த்தை.. இன்றாவது உடன்பாடு ஏற்படுமா?

Meenakshi
Mar 16, 2024,07:05 PM IST

சென்னை: மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக- தேமுதிக இடையேயான 3ம் கட்ட பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது.


மக்களவைத் தேர்தலுக்கு தேதி சொல்லி விட்டார்கள். திமுக கூட்டணியில் கிட்டத்தட்ட எல்லாம் முடிந்து விட்டது. பாஜக மற்றும் அதிமுக கூட்டணியின் இறுதி வடிவம்தான் இன்னும் தெரியாமல் உள்ளது. 


அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தீவிரமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறது. புதிய தமிழகம், அகில இந்திய பார்வர்ட் பிளாக் ஆகியவை கூட்டணியில் இணைந்துள்ளன. இந்த நிலையில், தேமுதிகவுடன் கூட்டணியை உறுதிப்படுத்த இன்று 3வது சுற்றுப் பேச்சுவார்தை மாலை 6 மணிக்கு  தொடங்கியது.




இரு கட்சிகளுக்கு இடையே மார்ச் 1ஆம் தேதி  முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கிருஷ்ணகிரி, விருதுநகர், திருச்சி, கடலூர் ஆகிய தொகுதிகளை ஒதுக்க தேமுதிக வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த முறை ஒதுக்கிய வட சென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்ததாக சொல்லப்படுகிறது.


இந்த நிலையில் அதிமுக-தேமுதிக இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை மார்ச் 6ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், தேமுதிக துணை செயலாளர் எல்.கே சுதீஷ், அவைத்தலைவர் பி இ இளங்கோவன், அழகாபுரம் ஆர் மோகன்ராஜ், பா. பார்த்தசாரதி உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு கலந்து கொண்டது. இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையிலும் சுமூக முடிவு எட்டப்பட வில்லை. 


இந்நிலையில், இன்று மாலை  3ம் கட்ட பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது.  இன்றாவது உடன்பாடு ஏற்படுமா என்ற அயர்ச்சியில் இரு கட்சியினரும் உள்ளனர்.