Inimel.. ஸ்ருதிஹாசன் விவரித்த விதம்.. என்னை உள்ளுக்குள் இழுத்தது.. லோகேஷ் கனகராஜ்

Meenakshi
Mar 26, 2024,04:58 PM IST

சென்னை: இனிமேல் ஆல்பம் பாடலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகராக மாறி ரொமான்சில் கலக்கியுள்ளார். தான் நடிக்க ஒப்புக் கொண்டதற்குக் காரணம், ஸ்ருதி ஹாசன் கதையை விவரித்த விதம் தான் என்றும் அவர் விளக்கியுள்ளார்.


இயக்குனராக அவதாரம் எடுத்த லோகேஷ் கனகராஜ் இப்போது நடிகராக மாறியிருக்கிறார். இவர் இயக்கத்தில் வெளியான பல படங்கள் சூப்பர் டுப்பர் ஹிட்டாகி வெற்றி பெற்றுள்ளன. இயக்குனராக நாம் பார்த்த லோகேஷ் கனகராஜ் அவ்வப்போது படங்களில் தலை காட்டியிருக்கிறார். மாஸ்டர் படத்தில் ஒரு சீனில் வருவார்.. சிங்கப்பூர் சலூன் படத்தில் ஒரு காட்சியில் வந்து போவார்.. இப்போது இனிமேல் ஆல்பம் பாடலில் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து கலக்கியுள்ளார்.




வயலன்ட் சீன் வைக்கும் லோகேஷா இப்படி ரொமான்டிக் லுக்கில் நடித்திருப்பது என்று பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இது குறித்து லோவோகேஷ் கனகராஜ் விலக்கியுள்ளார்.


"நான் ஏற்கனவே பல இன்டர்வியூக்களில் சொல்லி இருக்கிறேன். எப்படியாவது நடித்தே ஆக வேண்டும் என்கின்ற எண்ணம் எல்லாம் எனக்குக் கிடையாது. முதலில் இனிமேல் ஆல்பம் பாடல் தொடர்பாக நடிக்க வேண்டும் என்று ஸ்ருதிஹாசன் என்னை அணுகிய போது எனக்கு மிகவும் ஆச்சரியமாகவே இருந்தது, மேலும் நாம் ஏன் நடிக்க வேண்டும் என்கின்ற கேள்வியும் என்னுள் எழுந்தது. அந்த கேள்வியுடன் தான் அவர்களுடனான சந்திப்பு நிகழ்ந்தது. 


அங்கு எனக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்தது, அந்தக் கதையை மிகவும் இயல்பாக அவர்கள் விவரித்த விதம் தான்.  அப்பொழுது எனக்கு ஏன் நடிக்கக்கூடாது என்கின்ற எண்ணமும் எழுந்தது. எனக்கு கமல் சார் அவர்களை எவ்வளவு பிடிக்கும் என்பதை பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறேன். தமிழ் சினிமாத் துறையில் இருந்து வரும் கடந்த 9 ஆண்டுகாலத்தில் நான் அவரைப் பற்றித் தான் அதிகம் பேசியிருப்பேன் என்று நினைக்கிறேன். 




நான் நடித்து என்னுடைய உருவம் திரையில் தோன்றப் போகும் ஓரிரு கணங்களில் திரையின் பின்னால் அவரின் குரல் ஒலிக்கப் போகிறது என்கின்ற எண்ணமே என்னை சிலிர்க்கச் செய்தது. மேலும் என் திரைப்பயணத்தில் அது ஒரு அர்த்தமுள்ள பங்களிப்பாக இருக்கும் என்றும் தோன்றியது. அதன் பிறகு தான் நடிக்க சம்மதித்தேன். 


இருப்பினும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற முதல் நாளே ஸ்ருதிஹாசன் அவர்களிடம், நீங்கள் உங்கள் முடிவை இன்று மாலையே மாற்றிக் கொள்ள நேர்ந்தாலும் நேரலாம். எனக்கு அதுகுறித்து ஒரு வருத்தமும் இருக்கப் போவதில்லை. எனவே எதற்கும் ஒரு பேக்-அப் நடிகர் ஒருவரை தேர்வு செய்து கொள்ளுங்கள் என்றும் கூறி இருந்தேன்.  படப்பிடிப்பு தளத்தில் படத்தின் இயக்குநர் துவாரகேஷ், மற்றும் அவரின் குழுவினர் என அனைவருமே மிகவும் நட்பாக பழகினார்கள்.  அதனால் நடிப்பது என்பது மிகவும் சவால் நிறைந்த விஷயமாக தோன்றவில்லை. 


உண்மையாகவே நடிக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் அந்த அளவிற்கெல்லாம் இல்லை.  உண்மையாகவே எனக்கு நடிக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் இருந்திருந்தால் எனக்கு மிகவும் பிடித்த தமிழ்ப்படம் பொல்லாதவன். அப்படத்தின் கதையைப் போல் ஒரு கதையினை ரெடி செய்து, என் அசோசியேட் இயக்குநரைக் கொண்டு அதை இயக்க வைத்து அதில் நானே நடித்திருப்பேன். ஆனால் எனக்கு அப்படி எல்லாம் எந்த ஆசையும் இல்லை. 


லியோ படத்தின் டப்பிங் பணியின் போது நான் கமல் சாருக்கு போன் செய்து இப்படி ஒரு டயலாக் படத்தின் இறுதியில் நீங்கள் பேச வேண்டும் சார் என்று கேட்டுக் கொண்டேன்.  எனக்காக ஒரு நாள் ஒதுக்கி, அந்த இறுதி டயலாக்கை ஐந்து மொழிகளிலும் வந்து பேசிக் கொடுத்துவிட்டு சென்றார்.  அவரே இந்த அளவிற்கு எனக்கு உதவும் போது, ராஜ்கமல் நிறுவனம் என்னுடைய தாய்வீடு போன்றது.  அவர்களிடமிருந்து என்ன கேட்டு வந்தாலும்,  என்னாலும் மறுக்க முடியாது என்பதே உண்மை. மேலும் அடுத்து மூன்று படம் இயக்குவதற்கு அட்வான்ஸ் வாங்கி வைத்திருக்கிறேன். அந்தப் பணிகளை துவங்கவில்லை என்றால் பிரச்சனையாகிவிடும்.  




கேமரா முன் ஒரு சிறு பயம் இருந்தது. இப்பொழுது இந்த குழுவினரின் முயற்சியால் அந்த பயம் கொஞ்சம் குறைந்திருக்கிறது. அதற்காக அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.  என் நாயகர்களுக்கு திரைப்படத்தில் பாடல்கள் மற்றும் டூயட் இல்லாமல் அமைவது திட்டமிட்டதல்ல. என் படத்தின் வேலைகள் எதுவுமே தடைபடவில்லை.  இந்த ஆல்பத்தின் படப்பிடிப்பு வெறும் 3 நாட்கள் தான் நடந்தது. ஜூன் மாதத்தில் இருந்து என் படத்திற்கான படப்பிடிப்புப் பணிகள் துவங்கவிருக்கின்றன.


ஆக நடிக்க சம்மதித்ததற்கு 3 காரணங்கள் தான். மூன்று நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருந்தது முதற் காரணம். கமல்ஹாசன் சார் இரண்டாம் காரணம், ஸ்ருதிஹாசன் மற்றும் அவரின் குழுவினர் 3வது காரணம். நான் சோசியல் மீடியாவில் இல்லை என்பதால், பர்ஸ்ட் லுக் வெளியானதை கவனிக்கவில்லை. ஆனால் சற்று பதட்டமாகத்தான் இருந்தது.  மாநகரம் படம் வெளியாகும் போது எனக்கு இந்த பதட்டம் இல்லை. ஏனென்றால் அது எனக்குத் தெரிந்த துறை. எனக்குப் பிடித்த வேலை என்பதால் மக்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்பினேன். ஆனால் நடிப்பு என்பது ஸ்ருதி மற்றும் அவரின் குழுவினர் என் மீது வைத்த நம்பிக்கை. அதனால் ஒரு பதட்டம் இருந்தது. என் உதவி இயக்குநர்களிடம் கேட்டேன்.  சில மீம்ஸ் காட்டினார்கள்" என்று கூறியுள்ளார்.