லோக்சபா தேர்தல் கூட்டணி.. தீர்மானிக்க பிரேமலதா விஜயகாந்த்துக்கு அதிகாரம்.. மா.செ.க்கள் முடிவு!

Meenakshi
Feb 07, 2024,01:33 PM IST

சென்னை: சென்னையில் நடந்த தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்,  நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதா விஜயகாந்திற்கு முழு அதிகாரம் கொடுத்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், சென்னையில் இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதா விஜயகாந்திற்கு முழு அதிகாரம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.




கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்தார். அவர் மறைவுக்கு பின் எந்த நிகழ்வையும் நடத்தாமல் இருந்து வந்தது தேமுதிக. இந்நிலையில், முதன்முதலாக விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது.


முதலில் கேப்டன் விஜயகாந்திற்கும், சமீபத்தில் மறைந்த கட்சியினருக்கும் இரண்டு நிமிடம் மெளனஅஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தி பிரியா விடை கொடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என்றும் நெஞ்சம் மறவாத நன்றியை தேமுதிக தெரிவித்தது. விஜயகாந்திற்கு மாவட்டம் தோறும் சிலை அமைக்க மற்றும் விஜயகாந்த் நினைவிடத்தில் தினந்தோறும் அன்னதானம் உதவிகள் செய்ய  அறக்கட்டளை உருவாக்கியதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தேமுதிக தலைமைக் கழக வளாகத்தில் உறங்கிடும் புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் உறைவிடத்தை கோவிலாக மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகம் முழுவதிலும்  நான்கு மண்டலங்களில் கேப்டன் அவர்களின் நினைவேந்தல் புகழஞ்சலியை மாபெரும் பொதுக்கூட்டமாக நடத்திட தேமுதிக முடிவு செய்துள்ளது.


தேமுதிக இதுவரைக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து மறைமுகமாகவோ, அதிகாரப்பூர்வமாகவோ பேசவில்லை. ஊடகங்களில் வரும் செய்திகள் யூகமாகவே கருதப்படுகிறது. என்றும் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் சார்பில் தொடர்ந்து பேசு்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.