ஏப்ரல் 6ம் தேதி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

Meenakshi
Mar 29, 2024,06:56 PM IST

புதுடில்லி: இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 6ம் தேதி ஜெய்ப்பூரில் இருந்து வெளியிடப்படும் என்று  ராஜஸ்தான் மாநில  காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாசாரா தெரிவித்துள்ளார். 


மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.இந்தியா கூட்டணியில் உள்ள தேசிய கட்சியான காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை ஏப்ரல் 6ம் தேதி வெளியிட உள்ளது.இதனை  ராஜஸ்தான் மாநில  காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாசாரா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 19ம் தேதி நடந்த காங்கிஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.




அதில் 25 வாக்குறுதிகளுடன் 5 நீதிக் கொள்கைகள் இடம்பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், காங்கிரஸ் செயற்குழு கூட்டத்துக்கு பின் எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தகவலில், நாடு மாற்றத்திற்கான அழைப்பை விடுக்கிறது. நமது தேர்தல் அறிக்கை ஒவ்வொரு மாநிலத்திலும் வெளிப்படுத்துவது, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் நமது உறுதிபாட்டை எடுத்துச் சொல்வது ஆகியவற்றை உறுதி செய்வது தான் நம் அனைவரின் கடமை என தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை ராஜஸ்தானில் வைத்து வெளியிடுகிறது. அதில், கட்சியின் 5 நீதிக் கொள்கையின் கீழ் 25 வாக்குறுதிகள் மற்றும் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கான உறுதிமொழிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்களும், மூத்த உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.