மொத்தப் பேருக்கும் மத்தியில்... நான் ஒருத்தி மட்டுமே.. பெண்.. லாக்கர் பட நாயகி பளீர்பேச்சு!

Su.tha Arivalagan
Nov 22, 2023,05:09 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: லாக்கர் படப்பிடிப்பின் போது சுற்றிலும் ஆண்கள் கூட்டத்தின் மத்தியில் நான் ஒருத்தி மட்டுமே பெண். இருந்தாலும் பாலின பேதம் இல்லாமல் பாதுகாப்பாக உணர்ந்தேன் என நாயகி நிரஞ்சனி அசோகன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின் உருக்கமாக பேசினார்.


சினிமாவின் மீது தீராத காதல் கொண்டுள்ள ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் இரட்டையர்கள், நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் லாக்கர் என்ற புதிய படத்தை இயக்கி உள்ளனர். இப்படத்தை நாராயணன் செல்வன் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. தணிக்கைதாசன் ஒளிப்பதிவு செய்ய ,வைகுந்த் ஸ்ரீனிவாசன் இசையமைத்துள்ளார்.




இறுதிப் பக்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் சண்முகம் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். எதற்கும் துணிந்தவன், கேம் ஓவர் ,போன்ற படங்களில் எதிர்மறை கதாபாத்திரத்திலும், மாஸ்டர் படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நடித்தவர். கள்ளச் சிரிப்பு என்கிற ஜி5 க்கான வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். ஆல்பங்களிலும், சில பைலட் படங்களிலும் நடித்த நிரஞ்சனி அசோகன் லாக்கர் படத்தில் முதல் முறையாக நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களைத் தொடர்ந்து ஆதித்தன் மற்றும் சுப்பிரமணியன் மாதவன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படம் விறுவிறுப்பான திரில்லர் ராபரி படமாக உருவாகியுள்ளது.


இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு மற்றும் அறிமுக விழா நேற்று பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.




இரட்டை இயக்குநர்களில் ஒருவரான யுவராஜ் கண்ணன் பேசும்போது, "இதில்  பணியாற்றிய பலருக்கும்   இது முதல் படம் என்பதால் தங்களது சொந்தப் படம் போலவே உணர்ந்து  பணியாற்றி இருக்கிறார்கள். தயாரிப்பாளர் ''தம்பிகளா நல்லா பண்ணுங்க" என்று ஊக்கப்படுத்துவார். எங்கள் மீது நம்பிக்கை வைத்தார். அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை என்று நினைக்கிறேன்.படம் நன்றாக வந்துள்ளது" என்றார்.


இன்னொரு இயக்குநர் ராஜசேகர் பேசும்போது, " நானும்  யுவராஜும் 2013ல்  இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்ததிலிருந்து அறிமுகமாகி நண்பர்களாக இருக்கிறோம். நான் எந்தக் கதை சொன்னாலும் பொறுத்துக் கொள்பவர் யுவராஜ்.நாங்கள் சில ஆண்டுகளாகக் குறும்படங்கள் ,முயற்சிகள் என்று செய்து திரை உலகில் நுழையப் போராடிக் கொண்டிருந்தோம் .




இந்த தயாரிப்பாளரைச் சந்தித்தபோது அவர் கேட்டபடி கதையை 20 நாளில் தயார் செய்து கொடுத்தோம் .அப்படித்தான் இந்தக் கதை உருவானது..அவர் எங்கள் மீது நம்பிக்கை வைத்தார் .அதை நாங்கள் வீணாக்கவில்லை. அவர் செலவு செய்த ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்பு இருக்க வேண்டும் என்று நாங்கள் உழைத்தோம். அது நல்ல படமாக வந்துள்ளது.இதில் பங்கு பெற்ற அனைத்துக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.


நாயகன் விக்னேஷ் சண்முகம் பேசும்போது ,


'' எனக்கு முதலில் யுவராஜ் அறிமுகமானார்.இயக்குநர் ராஜசேகர் எனது குறும்படங்கள் போஸ்டர்  வந்துவிட்டால் கூட அதைப் பார்த்துப் பாராட்டி வாழ்த்துபவர். அது எனக்கு அவரது நல்ல பண்பைக் காட்டியது. ஒருநாள் கதை சொல்லப் போவதாக கூறினார் .ஏதோ ஒரு கதையை நன்றாக இருக்கிறதா என்று கேட்பதற்காக சொல்வதாக நினைத்தேன். 




ஆனால் என்னை வைத்து இயக்குவதாகச் சொன்ன போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அப்படித்தான் இந்தப் படத்தில் வந்து நடித்திருக்கிறேன். இதற்கு முன் நான் நடித்த இறுதிப்பக்கம் ,கள்ளச்சிரிப்பு போன்ற படைப்புகள் கொடுத்த இயக்குநர்கள் வழியாகத்தான் இந்த மேடையை நான் அடைந்திருக்கிறேன். அப்படி வாய்ப்பு கொடுத்த அவர்களுக்கு என் நன்றி"என்றார்.


கதாநாயகி நிரஞ்னி அசோகன் பேசும்போது,


"எனது குறும்படத்தைப் பார்த்து விட்டுத் தான் இந்த லாக்கர் பட வாய்ப்பு வந்தது. இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்ட போது முதலில் நான் நம்பவில்லை. ஏனென்றால் நிறைய போலிகள் உலா வருகிற காலம் இது. உண்மையாக இருக்குமா என்று நான் சந்தேகப்பட்டேன்.


அவர்களின் அலுவலகம் சென்றபோது எனக்கு இரண்டு விஷயங்கள் பிடித்தன .ஒன்று அவர்கள் கதை விவரித்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது. அவ்வளவு  அருமையாக இருந்தது. அடுத்தது  முதல் படத்திற்காக அவர்களது முன் தயாரிப்பு ஆச்சரியப்பட வைத்தது. எல்லாவற்றையும் தெளிவாகத் திட்டமிட்டு வைத்திருந்தார்கள். அதேபோல் தான் படப்பிடிப்பும் நடந்தது.




படம் திறந்தவெளியில்  படமாக்கப்படுகிற போது கூட பருவ கால நிலை மாற்றத்தால் திடீரென்று மழை வரும். ஆனால் அதைக் கண்டு மிரண்டு விடாமல் அதற்கு ஒரு மாற்றுத் திட்டம் வைத்திருந்தார்கள். இப்படி மிகவும் சரியாகத் திட்டமிட்டு வைத்திருந்தது எனக்கு ஆச்சரியமூட்டியது என்றார்.