திருச்சி மாவட்டத்திற்கு ஏப்., 15ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு: மாவட்ட ஆட்சியர்

Meenakshi
Apr 09, 2025,03:40 PM IST

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை ஒட்டி திருச்சி மாவட்டத்திற்கு ஏப்., 15ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.


திருச்சியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் தளமாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறும் தேர்திருவிழா சிறப்பு வாய்ததாக கருதப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.


திருவிழா தொடங்கிய நாள் முதல் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம்  வருகிறார்.  அத்துடன் தினமும் இரவு 8 மணிக்கு சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், மரகுதிரை உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 




இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 15ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேரோட்ட நிகழ்ச்சிக்கு உள்ளூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள். இதனால், கூட்டம் அதிகமாக இருக்கும் காரணத்தினால், வருகிற 15ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக மே 3ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.