என்னாது "சரக்கு"  விலை ஏறப் போகுதா.. ஷாக்கில் குடிமகன்கள்!

Meenakshi
Sep 15, 2023,04:23 PM IST

சென்னை: மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் மது விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் குடிமக்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

குடிப்பது என்பது முன்பெல்லாம் எப்பவாச்சும்தான் மக்களின் பழக்கமாக இருந்தது. வாரத்திற்கு ஒருமுறை குடிப்பார்கள்.. அல்லது ஏதாவது விசேஷம் என்றால் குடிப்பார்கள்.. ஆனால் இன்று தினசரி காலை எழுந்து எப்படி பல்லை விளக்கி சாப்பாடு சாப்பிட்டு விட்டு ஆபீஸுக்கோ அல்லது வேலைக்கோ போகிறோமோ அதேபோல ரெகுலராக குடிப்பவர்கள் பெருகி விட்டனர்.



இவர்களுக்கு அவ்வப்போது டாஸ்மாக் நிறுவனம் ஷாக் தரும்.. அதாவது மது பானங்களின் விலையை ஏற்றி அதிர வைக்கும். இப்போதும் அப்படி ஒரு விலை உயர்வு வரப் போவதாக தகவல்கள் சொல்கின்றன.

மதுபானங்கள் தயாரிப்புக்கு தேவையான முக்கிய மூலப்பொருளின் விலை ஏற்றத்தினாலும், ஜிஎஸ்டி வரி உயர்வினாலும் மது விலை உயரவுள்ளது. சாதாரண, நடுத்தரம், உயர்தரம் என்று 3 ரகங்களில் மதுபானங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் நடுத்தர, உயர்தர மதுபானங்களை உற்பத்தி செய்வதில் தான் அதிக லாபம் கிடைக்கும் என்பதினால் இவற்றை அதிகமாக தயாரிக்கின்றனர். சாதாரண ரகங்களில் போதியளவு லாபம் இல்லை என்பதால் குறைவாக அளவில் மதுபானங்களை உற்பத்தி செய்கின்றனர் ஆலை உரிமையாளர்கள். டாஸ்மாக் கடைகளில் சாதாரண ரக மதுபாட்டில்கள் குவாட்டர் ரூ.140-க்கு கீழ் விற்கப்படுகிறது. கூலித்தொழிலாளர்கள் இந்த ரக மதுபானத்தைதான் வாங்கிச் செல்கிறார்கள்.

உற்பத்திச் செலவு காரணமாக, சாதாரண ரக மதுபானங்கள் உற்பத்தியை குறைக்க மதுபான ஆலைகள் முடிவு செய்துள்ளன. ஆனால், அப்படிக் குறைக்கக் கூடாது என்று 'டாஸ்மாக்' நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் உற்பத்தி செலவை சமாளிக்கும் அளவுக்கு செலவுத் தொகையை உயர்த்திக் கொடுத்தால் உற்பத்தியைக் குறைக்க மாட்டோம் என்று மது பான ஆலைகள் சொல்கின்றன. இதுதொடர்பாக பேச்சு நடைபெற்று வருகிறது. இந்தப் பிரச்சினையை சமாளிக்கவே விலை உயர்வு என்ற அஸ்திரத்தை டாஸ்மாக் எடுக்கவுள்ளதாக சொல்கிறார்கள்.

"குடிமக்கள் நலனுக்காக" டாஸ்மாக் நிறுவனம் எவ்வளவு போராட வேண்டியிருக்கு பாருங்க!