லின்டா கைக்கு மாறப் போகிறதா டிவிட்டர்.. எலான் மஸ்க் பதவி விலகுகிறார்

Su.tha Arivalagan
May 12, 2023,12:06 PM IST
கலிபோர்னியா:  டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பொறுப்பில் என்பிசியுனிவர்சல் நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் உள்ள லின்டா யாக்கரினோ நியமிக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. எலான் மஸ்க் இதுதொடர்பான முடிவுகளை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

டிவிட்டர் நிறுவனத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வாங்கினார் எலான் மஸ்க். அதன் பின்னர் அவரே தலைமை செயலதிகாரியாகவும் இருக்கிறார். பல ஆயிரம் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கினார். அதிரடியான பல மாற்றங்களைச் செய்தார். தொடர்ந்து  டிவிட்டரில் பல மாற்றங்கள் வந்து கொண்டே உள்ளன. விரைவில் தொழில்நுட்ப ரீதியாக பெரும் புரட்சிகரமான மாற்றங்களையும் டிவிட்டர் காணவுள்ளது.



இந்த நிலையில்,  தலைமை செயலதிகாரி பொறுப்பிலிருந்து விலகப் போகிறார் எலான் மஸ்க். இதை சில மாதங்களுக்கு முன்பு அவரே கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து புதிய தலைமை செயலதிகாரியை அவர் கண்டுபிடித்துள்ளார். என்பிசி யுனிவர்சல் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ள லின்டா யாக்கரினோவுடன் இதுதொடர்பாக பேச்சு முடிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக நேற்று அவர் ஒரு டிவீட் போட்டிருந்தார். அதில் இன்னும் ஆறு வாரங்களில் புதிய சிஇஓ தனது பணியைத் தொடங்குவார். நான் செயல் தலைவர் மற்றும் தலைமை டெக்னாலிஜிஸ்ட்டாக மாறுவேன் என்று கூறியுள்ளார். அந்த புதிய சிஇஓ லின்டாதான் என்று சொல்லப்படுகிறது. லின்டா தற்போது என்பிசி யுனிவர்சல் மீடியா நிறுவனத்தின் உலகளாவிய விளம்பரம் மற்றும் பங்குதாரர்கள் பிரிவின் தலைவராக இருக்கிறார். 

புதிய சிஇஓ எப்படி இருப்பார்.. மஸ்க் மாதிரி செயல்படுவாரா அல்லது மஸ்க்கை விட வேகமாக இருப்பாரா என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.