தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழை  பெய்ய வாய்ப்பு

Su.tha Arivalagan
Aug 19, 2023,01:14 PM IST
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக இரவு நேர மழை பெய்து மண்ணையும், மக்களையும் குளிர வைத்தது.

இந்த நிலையில் அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையத் தகவல் தெரிவித்துள்ளது. சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வருகிற 25ம் தேதி வரை இந்த மழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் மேக மூட்டமாக காணப்படும் என்றும் சில நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்ப நிலை 37 டிகிரி செல்சியஸாக இருக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.