தென் தமிழ்நாட்டில்.. இன்னும் ஒரு வாரத்துக்கு லைட்டா மழை பெய்ய வாய்ப்பு.. வடக்கில் வறட்சிதான்!

Su.tha Arivalagan
Apr 22, 2024,06:42 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் தென் பகுதியில் 28ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், இதே காலகட்டத்தில் வட தமிழ்நாட்டிலும், புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் தொடர்ந்து வெயில் வெளுத்தெடுத்து வருகிறது. இந்த நிலையில் தென் தமிழ்நாட்டுக்கு ஒரு சந்தோஷச் செய்தியைச் சொல்லியுள்ளது வானிலை ஆய்வு மையம். இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:




22ம் தேதி முதல் 28ம் தேதி வரை தென் தமிழகத்தில், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.


22ம்  தேதி முதல் 26ம் தேதிவரை தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சி இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 செல்சியஸ் டிகிரி வரை வெப்ப நிலை இருக்கக் கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலையில் பெரிய மாற்றம் இருக்காது.


இன்று வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்களைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.