OMG.. குன்னூர் வீட்டுக்குள் புகுந்து.. 24 மணி நேரம் கேம்ப் அடித்த சிறுத்தை.. தானாக வெளியேறியது

Su.tha Arivalagan
Nov 13, 2023,11:38 AM IST
குன்னூர்:  நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 24 மணி நேரமாக வீட்டில் பதுங்கி இருந்த சிறுத்தை இன்று அதிகாலை தானாக வெளியேறி சென்றது.

காட்டையெல்லாம் அழிச்சாச்சாச்சு.. அல்லது ஆக்கிரமிப்பு பண்ணியாச்சு.. பிறகு விலங்குகள் தண்ணீருக்கும் இரைக்கும் எங்கு போகும்..  ஊருக்குள்தானே வரும்.. அந்த பிரச்சினையைத்தான் கடந்த சில வருடங்களாக கோவை, நீலகிரி மாவட்ட மக்கள் சந்தித்து வருகின்றனர். அடிக்கடி காட்டு விலங்குகள் குறிப்பாக யானைகள் ஊர்களுக்குள் புகும் சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. ஆனால் குன்னூரில் ஒரு வீட்டுக்குள் சிறுத்தை புகுந்து இரவு முழுவதும் டேரா போட்டிருந்த சம்பவம் திகிலைக் கிளப்பியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அட்டடி பகுதியை சேர்ந்தவர் விமலா. அப்பகுதியில் இவருக்கு சொந்தமான மிகப்பெரிய வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் நான்கு நாய்கள் வளர்த்து வருகிறார்.  திடீரென வழக்கத்திற்கு மாறாக நாய்களின் சத்தம் கேட்டு கண் விழித்தார். அப்போது வெளியே வந்து பார்த்தபோது நாயை துரத்திக் கொண்டு சிறுத்தை உள்ளே நுழைவதை கண்டார். நாய்கள் தப்பிக்க முயன்று வீட்டிற்குள் நுழைந்தது  .நாயை பின்தொடர்ந்து சிறுத்தையும் வீட்டிற்குள் நுழைந்தது. 



அதிர்ச்சி அடைந்து, சிறுத்தையைத் தடுக்க முயன்ற விமலாவையும் சிறுத்தை தாக்கியது. வீட்டில் இருந்த அனைவரும் அலறி கத்தினர். பின்னர் சிறுத்தை சமையலறை நோக்கி சென்றது. விமலா சாதுர்யமாக செயல்பட்டு சமையலறைக்குள் சென்ற சிறுத்தையை உள்ளே வைத்து பூட்டினார். பின்னர் குன்னூரில் உள்ள வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனே விரைந்து வந்த வனத்துறையினர் விமலா உட்பட வீட்டில் உள்ள நால்வரையும் மீட்டனர்.

சிறுத்தையை பத்திரமாக பிடிக்கும் பணி தொடங்கியது.  கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக பாதுகாப்பு உடை அணிந்து சிறுத்தையை  பிடிக்க மீட்பு பணியினர் போராடி வந்தனர். இதில் மூன்று வனத்துறையினரை சிறுத்தை தாக்கியது. அவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த மூன்று மீட்பு படையினர் உட்பட ஏழு பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தினர். இதனை ஏற்று கூண்டு வைக்கும் முயற்சிகள் நடந்து வந்தன. இந்த நிலையில் இன்று அதிகாலை, வனத்துறையினர் நேற்று பதிவான சிசிடிவி காட்சியை பார்த்தனர்.அப்போது போக்கு காட்டி வந்த சிறுத்தை, தானாகவே வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது. 

விமலாவின் வீட்டைச் சுற்றி காடுகள் என்பதால் சிறுத்தை எங்கு சென்றிருக்கிறது என வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ப்ருக்லேண்ட்ஸ் சாலையை சுற்றியுள்ள இடங்களில் சுற்றுலாப் பயணிகள், நடப்பயணம் மேற்கொள்பவர்கள், பணிக்கு செல்பவர்கள் என யாரும் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.