சிக்கிய சிறுத்தை.. ஓட ஓட விரட்டி.. வச்சு செஞ்ச குரங்குகள்!

Su.tha Arivalagan
Aug 16, 2023,05:09 PM IST
பிரிட்டோரியா: தென் ஆப்பிரிக்காவில் தனியாக சிக்கிய ஒரு சிறுத்தையை, குரங்குக் கூட்டம் ஒன்று ஓட ஓட விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குரங்குகளிடமிருந்து தப்பிப் பிழைக்க அந்த சிறுத்தை ஓடிய ஓட்டம் பலரையும் சிரிக்க வைத்துள்ளது.

வலியவர்கள் கையே எப்போதும் ஓங்கியிருக்கும் என்று சொல்வார்கள்.. பொதுவான உலகக் கருத்தும் கூட அதுவே. ஆனால் எளியவர்கள் எழுந்து நின்று எதிர்க்க ஆரம்பித்தால்,எத்தகைய வலியவரும் ஆடித்தான் போக வேண்டும். அதைத்தான் இந்த வீடியோ காட்சி நிரூபித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் கிருகர் தேசிய பூங்கா உலகப் புகழ் பெற்ற சரணாலயம் ஆகும். இங்கு விலங்கியல் பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் சபாரி  செல்வது வழக்கம். அந்த வகையில் ஒரு குடும்பத்தினர் இங்கு சபாரி சென்றிருந்தனர். அப்போது வழியில் மிகப் பெரியஅளவில் பபூன் வகை குரங்குகள் கூட்டமாக அமர்ந்திருந்தன. சாலையில் நடந்தபடியும், உட்கார்ந்தபடியும் அவை காணப்பட்டன.



அந்த குரங்குகளை சபாரி சென்றிருந்த மெர்வ் மெர்சின்லிகில் என்பவர் வீடியோவில் படம் பிடித்தபடி இருந்தார். அப்போது திடீரென ஒரு சிறுத்தை அங்கு பாய்ந்து வந்தது. சிறுத்தையைப்  பார்த்ததும் குரங்குகள் பயந்து ஓடவில்லை. மாறாக சிறுத்தையை மடக்கிப் பிடித்தன. பாய்ந்து பாய்ந்து கடித்தன. ஆக்ரோஷமாக சண்டையிட்டன. இதை எதிர்பார்த்திராத சிறுத்தை அவர்களிடமிருந்து தப்பிக்க சில நிமிடங்கள் போராட வேண்டியதாயிற்று.

பின்னர் ஒரு வழியாக குரங்குகளின் பிடியிலிருந்து விடுபட்ட சிறுத்தை மின்னல் வேகத்தில் பாய்ந்தோடி உயிர் தப்பியது. அப்படியும் விடாமல் சில குரங்குகள் சிறுத்தையை விரட்டிச் சென்றன. மின்னல் வேகத்தில் நடந்த இந்த காட்சியை மெர்வின் குடும்பத்தினர் அழகாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

வன விலங்குகளில் பலம் வாய்ந்த சிங்கம், புலி போன்றவற்றுக்கும் கூட அன்றாட வாழ்வில் சவால்கள் காத்திருக்கத்தான் செய்கின்றன என்பதையே இந்த காட்சி உணர்த்துகிறது.