லியோ வெற்றி விழா... யாரெல்லாம் வர்றாங்க.. எத்தனை டிக்கெட் தரப் போறீங்க.. போலீஸ் கேள்வி

Aadmika
Oct 29, 2023,09:57 PM IST

சென்னை : லியோ படத்தின் வெற்றி விழா தொடர்பாக பல விதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ள காவல்துறை, பலவிதமான கேள்விகளையும் எழுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் ரிலீசாவதற்கு முன்பே பலவிதமா சர்ச்சைகள், விமர்சனங்கள், எதிர்ப்புகளை எதிர்கொண்டது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுவதாக இருந்து கடைசி நேரத்தில் பாதுகாப்பு காரணங்களைக் கூறி ரத்து செய்யப்பட்டது. இதில் அரசியல் நெருக்கடி இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்தது. இந்த சந்தேகம் இப்போது வரை அப்படியே உள்ளது.




ஆடியோ வெளியீட்டில் துவங்கிய பிரச்சனை படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ, டிக்கெட் விற்பனை என பலவற்றிலும் தொடர்ந்தது. கோர்ட் வரை போய், பல பிரச்சனைகளை தாண்டி ஒரு வழியாக அக்டோபர் 19 ம் தேதி படத்தை ரிலீஸ் செய்து, கிட்டதட்ட 500 கோடி வரை வசூலும் பார்த்து விட்டார்கள். தற்போது படத்தின் வெற்றி விழாவை சென்னையில் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.


சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ வெற்றி விழாவை நடத்த தமிழக போலீசாரிடம் படக்குழு கோரிக்கை அளித்தது. இந்நிலையில் இன்று பல விதமான கேள்விகள் கேட்டு லியோ பட தயாரிப்பு நிறுவனத்திற்கு போலீசார் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 


அந்த கடிதத்தில், வெற்றி விழா கொண்டாட்டம் எத்தனை மணிக்கு துவங்கி, எத்தனை மணிக்கு முடியும்? எவ்வளவு டிக்கெட்கள் விற்பனை செய்யப்படவுள்ளன? காவல்துறை பாதுகாப்பு தவிர்த்து, தனியார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி விழாவில் பங்கேற்கும் முக்கிய விருந்தினர்களின் தகவல்களை அளிக்க வேண்டும். 5000 நபர்களுக்கு அதிகமானவர்கள் விழாவில் பங்கேற்க கூடாது எனவும் அந்த கடிதத்தில் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.