பட்டாசாக வெளியான லியோ.. கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்.. தியேட்டர்களில் திருவிழா!

Meenakshi
Oct 19, 2023,11:11 AM IST

சென்னை: தமிழகத்தில் லியோ திரைப்படம் பல சிக்கல்கள், சச்சரவுகள், போராட்டங்களை தாண்டி இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. விஜய் ரசிகர்கள் இப்படத்தை காண இரவு முழுவதும் திரையங்குகளின் முன்னர் காத்திருந்தனர்.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில்  உருவாகியுள்ள படம் லியோ. இப்படம் உலகம் முழுவதும் இன்று திரையிடப்பட்டது. தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டது. ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளாவில் திரையங்குகளில் விழாக் கோலத்தில் கொண்டாடி வருகின்றனர். 




மற்ற மாநிலங்களில் எல்லாம் விஜய் ரசிகர்கள் படம் வேற லெவலில் உள்ளதாக கூறி வருகின்றனர். லோகேஷ், விஜய் இருவரையும் மாஸ்சாக்கி கொண்டாடி வருகின்றனர்.  இந்த நிலையில், தமிழகத்தில் 9 மணிக்கு தான் காட்சி தொடங்கும் என்பதால், தமிழகம் முழுவதிலும் பல பஞ்சாயத்தை தீர்த்தாச்சுடா... என பெருமூச்சு விட்டு விஜய் ரசிகர்கள்  மேளதாளத்துடன் படத்தை காண வந்தனர். 


விஜய் பெயர் வைக்கத் துடித்த கர்ப்பிணி


ஆர்வ மிகுதியால் தியேட்டருக்குள் ரசிகர்கள் ஓடிச்சென்று சீட்டில் அமர்ந்தனர். லியோ திரைப்படத்தை  காண கோவையில் இருந்து கேரளா வந்த கர்ப்பிணி பெண் ஒருவர் எனது குழந்தைக்கு விஜய்யினு தான் பேரு வைப்பேன் என்றார்.  அவரை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்று பாதுகாப்பாக படம் பார்க்க உதவினர்.


திருப்பூரில் 20 அடி கேக் வெட்டியும், நடனமாடியும் ரசிகர்கள் கொண்டாடினர். புதுக்கோட்டையில் லியோ படத்தின் முதல் காட்சியின் போது மோதிரம் மாற்றிக்கொண்டு திரையரங்கிலேயே திருமணம் நிச்சயம் செய்து கொண்டனர் ஒரு ஜோடி. 


இவ்வாறாக ரசிகர்கள் பல விதங்களில் லியோ திரைப்பட  வெளியீட்டை தமிழகம் முழுவதிலும் கொண்டாடி வருகின்றனர். நான் ரெடி தான் வரவா என இப்படத்தில் பாடல் வரிகள் இடம் பிடித்துள்ளாதாலும், அரசியலில் கால் பதிக்க விஜய் ரெடியாகி வருகின்ற இந்த நேரத்தில் இப்படம் வெளியாகி இருப்பது எதிர்ப்புகளை  மேலும் அதிகரித்துள்ளது. 


இந்த காரணத்தினால் லியோ படத்திற்கு பல நெருக்கடிகள் அதிகரித்து வந்துள்ளதாக கூறுகின்றனர். இவற்றை எல்லாம் தாண்டி படம் எப்பொழுது எப்படி வந்தாலும் பார்க்க நாங்களும் ரெடி தான் என்று தமிழக ரசிகர்கள் காலை 9 மணி வரை காத்திருந்து படத்தை கண்டு மகிழ்ந்தனர்.