சலசலப்பைக் கிளப்பிய Leo Badass.. யாருங்க அந்த "பெரும்புள்ளி"?

Su.tha Arivalagan
Sep 29, 2023,08:34 AM IST

- மஞ்சுளா தேவி



சென்னை: தளபதி விஜய் நடிக்கும் லியோ படாஸ் பாட்டில் வரும் வரிகள் அனல் பறக்க தீப்பொறி கிளம்ப பட்டையைக் கிளப்பி வரும் நிலையில் அதில் யாரையெல்லாம் குறி வைத்துக் குத்தியிருக்கிறார்கள் என்ற விவாதமும் படு சூடாக நடந்து வருகிறது.


லியோ படத்தின் இரண்டாவது பாடல் நேற்று வெளியிடப்பட்டது. லியோ படாஸ் என்ற இந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் அதற்குள்ளாகவே பாப்புலர் ஆகி விட்டது. முதல் பாடலை விட இந்தப் பாட்டு படு தீயாக இருக்கிறது.




இந்தப் பாடலில் வரும் வரிகள்தான் பல விதமான விவாதங்களைக் கிளப்பியுள்ளது.


"சிங்கம் இறங்குனா காட்டுக்கே விருந்து... 

இவன் வேட்டைக்கு சிதறனும் பயந்து..

பெரும்புள்ளிக்கெல்லாம் முற்றுப்புள்ளி எழுதி...

கொடல உருவுற சம்பவம் உறுதி.."


என்ற வரிகள் பலரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது.. ஆஹா.. ஏதோ பெரிய மெசேஜா இருக்கே.. இந்த மெசேஜ் யாருக்கு.. பெரும்புள்ளின்னு "அவரை"த்தான் சொல்றாங்களா என்று விவாதங்கள் கிளம்பி விட்டன. பாடலில் வரும் பல வரிகளும் இதுபோலத்தான் இருக்கிறது.


திரையுலகப் பெரும்புள்ளி யாரையாவது குறிப்பிடுகிறார்களா அல்லது அரசியல் பெரும்புள்ளி யாரையாவது குத்திக் காட்டியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.. படத்தின் கதையில் வரும் பெரும்புள்ளியாகத்தான் நிச்சயம் இது இருக்கும்.. என்றாலும் கூட தற்போது விஜய்யைச் சுற்றிச் சுற்றி வரும் நெருக்கடிகளும் நம் கண் முன்பு வந்து போவதால் விஜய்க்காக எழுதப்பட்ட இந்தப் பாடலில் யாரை மனதில் வைத்து இப்படி வார்த்தையைப் போட்டார்கள் என்பது விவாதமாகியுள்ளது.


சமீபத்தில் கூட  காக்கா - பருந்துக் கதை பரபரப்பைக் கிளப்பியது என்பது நினைவிருக்கலாம்.. அதுக்குத்தான் இந்த சரவெடி பதிலடியா என்ற கேள்வியும் எழுகிறது.!


இந்தப் பாடல் வெளியாகி தற்போது 7 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி அதகளம் செய்து வருகிறது. விஜய் ரசிகர்கள் சும்மா அதிரடியான மாஸ் பாடல் என கமெண்ட் செய்து வருகின்றனர். விஜய் அரசியலுக்கு வரப் போகிறார் என்பதால் அவரது ரசிகர்களுக்கு இது புது தெம்பைக் கொடுக்கும் வகையில் உள்ளது.