Launch of XPoSAT: எக்ஸ்போசாட் வெற்றி.. 650 கிமீ உயரத்தில்.. புவிவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது

Su.tha Arivalagan
Jan 01, 2024,06:47 PM IST

டெல்லி: இந்த பிரபஞ்சத்தின் மிகப் பெரிய மர்மமாக திகழும் கருந்துளைகள் குறித்து ஆராய்வதற்காக இந்தியா உருவாக்கியுள்ள செயற்கைக்கோளான XPoSAT என்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஏவுதளத்திலிருந்து இந்த செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. 


விண்ணில் செலுத்தப்பட்ட எக்ஸ்போசாட் செயற்கைக் கோள்  பூமியிலிருந்து 650 கிலோமீட்டர் உயரத்தில், புவி வட்டப் பாதையில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன் மூலம் எக்ஸ்போசாட் செலுத்தும் பணி வெற்றியடைந்துள்ளது.


எக்ஸ்போசாட்டுடன் சேர்த்து மொத்தம் 11 செயற்கைக்கோள்கள் இந்த ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட்டன.  ரூ. 250 கோடி  செலவில் உருவாக்கப்பட்டுள்ள XPoSat செயற்கைக் கோள் 469 கிலோ எடையுடன் கூடியது. ஐந்து ஆண்டுகாலம் செயல்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதேபோன்றதொரு செயற்கைக் கோளை கடந்த 2021ம் ஆண்டு அமெரிக்காவின் நாசா அனுப்பியிருந்தது. அந்த செயற்கைக் கோளுக்குப் பெயர் IXPE என்பதாகும். இதன் ஆயுள் காலம் 2 ஆண்டுகள்தான்.


பிஎஸ்எல்வி -சி58 ராக்கெட் மூலம் எக்ஸ்போசாட் விண்ணில் செலுத்தப்பட்டது. பிஎஸ்எல்வியின் 60வது பயணம் இது.




எக்ஸ்போசாட் செயற்கைக் கோள் கருந்துளைகள் குறித்தும், நியூட்ரான் நட்சத்திரங்கள் குறித்தும் ஆராயும். இதில் புதிய தகவல் கிடைத்தால் அது மானுட உலகுக்கே மிகப்பெரிய விஷயமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.


கருந்துளைகள் குறித்து ஆராயும் செயற்கைக் கோளை இதற்கு முன்பு அமெரிக்கா மட்டுமே செலுத்தியுள்ளது. தற்போது அந்த வரிசையில் 2வது நாடாக இந்தியா இணைகிறது. கருந்துளைகள் மற்றும் நியூட்ரான் நட்சத்திரங்களிலிருந்து வரும் கதிர்வீச்சுக்களை எக்ஸ்போசாட் ஆய்வு செய்யவுள்ளது.  இந்த செயற்கைக் கோளில் போலிக்ஸ் POLIX எனப்படும் எக்ஸ்ரே போலாரி மீட்டர் கருவியும், XSPECT எனப்படும் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோகிராபி கருவியும் இடம் பெற்றிருக்கும்.


ஒரு நட்சத்திரமானது தனது ஆயுளை இழந்து மரணிக்கும்போது அது தனது ஈர்ப்பு விசைக்குள் போய் விடும்.. அதாவது கருந்துளை அல்லது நியூட்ரான் நட்சத்திரமாக மாறி விடும். பிரபஞ்சத்திலேயே அதிக அளவிலான சக்தி வாய்ந்த ஈர்ப்பு விசையுடன் கூடியது கருந்துளைகள்தான். கருந்துளைகள் குறித்து நமக்கு முழுமையான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. அது கிடைத்தால் பல மர்மங்களுக்கு நமக்குப் பதில் கிடைக்கும் என்பதால் கருந்துளைகள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து கொண்டுள்ளன.


நிலவு குறித்த ஆய்வுகளில் குறிப்பாக தண்ணீர் குறித்த ஆய்வுகளில், இந்தியாவின் சந்திராயன் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக  சந்திரயான் 3 விண்கலமானது, அதுவரை யாரும் போயிராத நிலவின் தென் பகுதியில் கால் பதித்து சரித்திரம் படைத்தது. அந்த வரிசையில் கருந்துளைகள் குறித்த ஆய்விலும் இந்தியா ஏதாவது புதிய அதிசயத்தை கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.